சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகள் பதிவிடுபவர்களின் பட்டியல்: தமிழகம் முழுவதும் சேகரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளைப் பதிவு செய்பவர்களின் பட்டியலை தமிழகம் முழுவதும் சேகரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் ஏடிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஆபாசமாக சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டுத் தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது .

அப்போது சமூக வலைதளங்களில் கடுமையாக ஆபாச வார்த்தைகளை பதிவிட்டு அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியலமைப்புப் பதவி வகிப்பவர்கள் குறித்தும், அவர்களது குடும்பத்தினர் குறித்தும் தனிப்பட்ட முறையில் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தண்டபாணி தெரிவித்திருந்தார்.

மேலும், சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துக்களை வெளியிட்டு பதிவு செய்தவர்களின் பட்டியலை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சைபர் க்ரைம் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஜன.24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை திருப்தி அளிக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதி, இதுபோல் அவதூறாகவும் ஆபாசமாகவும் கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக என்ன மாதிரியான நடைமுறை வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துகளைப் பதிவு செய்பவர்களின் பட்டியலைச் சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் ஜன.29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மனுதாரர் இனிமேல் இதுபோன்ற கருத்துகளை வெளியிட மாட்டேன் என்று மன்னிப்புக் கடிதம் அளித்தால் ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in