Published : 24 Jan 2020 08:47 AM
Last Updated : 24 Jan 2020 08:47 AM
ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடு வது, மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்துவது போன்ற செயல்களைஏற்க முடியாது. இது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
‘துக்ளக்’ பொன்விழாவில் பெரியார் குறித்து ரஜினிபேசியது பெரும் சர்ச்சையாகிஉள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேட்டபோது குஷ்பு கூறியதாவது:
ஜனநாயக நாடான இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. மிகப்பெரிய நடிகரான ரஜினிக்கு தனது கருத்தை சொல்ல உரிமைஉண்டு. பலமுறை பொது நிகழ்ச்சிகளில் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
‘துக்ளக்’ விழாவில் அவர் பேசி 4 நாட்களுக்குப் பிறகு அதை பெரிதுபடுத்தியுள்ளனர். ரஜினியின் கருத்துக்கு மாற்றுக் கருத்து இருந்தால் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதற்கு மாறாக வீட்டை முற்றுகையிடுவது, மன்னிப்பு கேட்குமாறு வற்புறுத்துவது போன்ற செயல்களை ஏற்க முடியாது. இது கண்டனத்துக்குரியது.
மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் மதித்தவர் பெரியார்.தன் மீது செருப்பு வீசப்பட்டபோது, ‘மற்றொரு செருப்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள். அதையும் வீசு. நானாவது பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்ற பக்குவமாய் பதிலடி கொடுத்தவர் பெரியார்.
இப்போது பெரியார் இருந்திருந்தால் தன்னை முன்வைத்து ரஜினிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை கண்டித்திருப்பார்.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெரியாரை புகழ்பவர்கள் தங்களது தலையில் எதுவும் இல்லை என்பதை உணராதவர்கள். பெரியார் ஆங்கிலேயர்களுக்கு ஏஜென்டாக இருந்தவர். ஆனால், இப்போது பெரியாரை மிகப்பெரியதலைவர்போல சித்தரிக்கின்றனர்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஜினியை மன்னிப்பு கேட்கச்சொல்பவர்கள், சட்டம் தெரிந்தமுன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவை மன்னிப்பு கேட்கச் சொல்வார்களா? அவரது வீட்டை முற்றுகையிடுவார்களா? ரஜினியைத் தவிர வேறு யாராவது பெரியார் குறித்து இவ்வாறு பேசியிருந்தால் அதை இந்த அளவுக்கு பெரிதுபடுத்தியிருக்க மாட்டார்கள்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT