Published : 24 Jan 2020 08:45 AM
Last Updated : 24 Jan 2020 08:45 AM

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பகம் புள்ளி விவரத்தில் தகவல்

சென்னை

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங் கள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசிய குற்றஆவணக் காப்பகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 2018-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,155 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 18 சதவீதம் அதிகமாகும். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தேசியகுற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் 49 சதவீதம் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமை தொடர்பானவை.

இந்திய அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகவுள்ள 5 மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது. புதுப்புது வழிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கருத்து தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பாலியல் சீண்டல் தொடர்பாக எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டுமென்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் ஆபாசப் படங்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என்ற தகவலை புள்ளி விவரத்துடன் மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில், இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் ஐபி முகவரியுடன் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தடை செய்யப்பட்ட இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், அதில் 3 ஆயிரம் பேர் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்த்துள்ளனர். இதுதொடர்பான பட்டியல் தமிழககாவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு மூலம், குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பதிவிறக்கம் செய்பவர்கள், அடுத்தவர்களுக்கு அனுப்புபவர்கள் மீது தற்போது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x