Published : 24 Jan 2020 07:49 AM
Last Updated : 24 Jan 2020 07:49 AM

குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி இன்று விசாரணை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடத்தப்பட்டது. 16.29 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவு கடந்த நவம்பர் 25-ம் தேதி வெளியானது.

தேர்வில் வெற்றியடைந்தவர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் 40 பேர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தனர். வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல தேர்வர்கள், இந்த 2 மையங்களிலும் தேர்வு எழுதியுள்ளனர். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகப் பிற தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதிய பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக அழைத்து அவர்களிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி விசாரணை நடத்தினர்.

‘வேறு மாவட்டத்தை சேர்ந்தநீங்கள் சம்பந்தமே இல்லாமல்எதற்காக அந்தத் தேர்வு மையத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’ என அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு, ‘இறந்த உறவினர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றேன். அதனால் அங்கேயே தேர்வு எழுதினேன்’ என பலரும்ஒரே மாதிரியான பதிலை அளித்துள்ளனர். இது அதிகாரிகளின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க கோரிடிஜிபியிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் புகார் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து டிஜிபி உத்தரவின்பேரில் இந்த விவகாரம் குறித்து இன்று (24-ம் தேதி) முதல் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x