உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் அறைகள் கட்ட ரூ.7.73 கோடி ஒதுக்கீடு: அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் அறைகள் கட்ட ரூ.7.73 கோடி ஒதுக்கீடு: அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு
Updated on
1 min read

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்களுக்காக கூடுதலாக 84 அறைகள் கட்டுவதற்கு ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்ததையடுத்து தலைமை செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்களுக்கு கூடுதல் அறைகள் கட்டக்கோரி வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த ஆண்டு பிப்ரவரில் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்ற கிளையில் கடந்த ஆண்டு ஏப். 30-க்குள் வழக்கறிஞர்களுக்கான கூடுதல் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை நிறைவேற்றாததால் தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி ஆனந்தமுருகன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், உயர் நீதிமன்ற கிளையில் தற்போது வழக்கறிஞர்கள் அறைகள் அமைந்திருக்கும் கட்டிடத்தில் 2-வது மாடியில் வழக்கறிஞர்களுக்கு கூடுதலாக 84 அறைகள் கட்டுவதற்கு ரூ.7 கோடியே 73 லட்சத்து 63 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான அரசாணை நகல் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in