Last Updated : 23 Jan, 2020 03:01 PM

 

Published : 23 Jan 2020 03:01 PM
Last Updated : 23 Jan 2020 03:01 PM

'ரஜினி நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதைப் பேசுபவர்': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

'நடிகர் ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதைப் பேசுபவர்' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள உதவி ஆணையர் மற்றும் உதவி தணிக்கை அலுவலர் அலுவலகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமையில் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராஜேந்திர பாலாஜியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதில், பெரியார் ரஜினி சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ரஜினி சேலத்தில் பேரணியில் என்ன நடந்ததோ அதைத் தான் கூறினார். தி.க.வினர் ரஜினியை மிரட்டிப் பார்க்கிறார்கள். கொடும்பாவியை எரிப்போம், வீட்டை முற்றுகையிடுவோம் என்பது மிரட்டல் தானே. பிராமண சமுதாயத்தை மட்டும் இழிவுபடுத்தும் செயலை தி.க.வினர் செய்துவருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் தாக்கி பிழைப்பு நடத்துகின்றனர்.

ஆன்மீகவாதிகளை பழிதீர்க்கும் செயலை திகவினர் செய்து கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை கள்ளம் கபடம் இல்லாமல் பேசுபவர் ரஜினிகாந்த்.

சேலம் பேரணியில் ராமபிரான் படத்தை நிர்வாணமாகக் கொண்டு வந்தது உண்மையா இல்லையா? இதே வேறு மதத்தைச் சேர்ந்த கடவுளை இப்படிச் செய்திருந்தால் சும்மா விடுவார்களா? பயங்கரவாதம் வெடித்திருக்காதா? இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் தேர்தலில் அதன் விளைவுகளை அனுபவிப்பார்கள்.

ரஜினிகாந்த் பேசியதை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். அதனால், ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது" எனப் பேசினார்.

ஆர்எஸ்எஸ் என்ன பயங்கரவாத அமைப்பா?

ஆர்எஸ்எஸ் கூறியதைத்தான் ரஜினி செய்து உள்ளார் என சில அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனரே? என செய்தியாளர்கள் கேட்க, "ஆர்எஸ்எஸ் என்ன பயங்கரவாத அமைப்பா? ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எங்கு குண்டு வைத்தார்கள்.
மகாத்மா காந்தியை கொலை செய்தது கோட்சே. ஆர்.எஸ்.எஸ். அல்ல. எனவே கோட்சேவைத் தான் கொலையாளியாக பார்க்க வேண்டும். கோயிலுக்கு சாமி கும்பிடச் செல்பவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ்.,காரர்களா?

யார் ஆன்மிக அரசியல்வாதி?

ஆன்மிக அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம்.
வழிபாட்டு முறை தான் வெவ்வேறு. கடவுள் ஒன்றே. நேர்மையாக சமூக சேவை செய்பவர்கள் எல்லாம் ஆன்மிக அரசியல்வாதிகளே" என்று விளக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x