Last Updated : 23 Jan, 2020 01:48 PM

 

Published : 23 Jan 2020 01:48 PM
Last Updated : 23 Jan 2020 01:48 PM

அரசு போக்குவரத்து கழகத்தில் 3655 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி

தமிழகத்தில் அரசுப் போக்குவரத்து கழகத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற 3655 பேருக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஏப். 2018 முதல் 2019 மார்ச் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.1093 கோடி பணப்பலன் பாக்கி சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

இதில் 280-க்கு மேற்பட்டோர் தாமதமாக பணப்பலன் வழங்கியதற்கு வட்டி கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் அரசு போக்குவரத்து கழகத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்கள் 3655 பேர் உள்ளனர். இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு நிதி, விடுப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் 520 பேர், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 460 பேர், மதுரை கோட்டத்தில் 463, நெல்லையில் 357, கோவையில் 552, சேலத்தில் 496, விழுப்புரத்தில் 327, கும்பகோணத்தில் 480 பேருக்கு ரூ.840 கோடி வழங்கப்பட வேண்டியதுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு 2019 ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இருப்பினும் அமைச்சர்கள் தேதி ஒதுக்காததால் பணப்பலன் வழங்குவதால் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பதாக 2019 ஏப்ரல் முதல் 2019 நவம்பர் வரை ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.840 பாக்கியை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x