Last Updated : 23 Jan, 2020 01:05 PM

 

Published : 23 Jan 2020 01:05 PM
Last Updated : 23 Jan 2020 01:05 PM

எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்க: நீதிமன்றத்தை விமர்சித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது தொடர்பாக பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை திருமயத்தில் 2018 செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மேடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக போலீஸாரிடம் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கேள்வி எழுப்பினார். அதற்கு போலீஸார் நீதிமன்ற உத்தரவுபடி செயல்படுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிமன்றத்தை அவதூறாக பேசியதுடன், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே நீதிமன்றத்தை பகிரங்கமாக விமர்சித்தது தொடர்பாக எச்.ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான எச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனால் அவமதிப்பு வழக்கு முடிக்கப்பட்டது.

இந்நிலையில் எச்.ராஜா மீது திருமயம் போலீஸார் பதிவு செய்த வழக்கில் விசாரணையை முடித்து விரைவில் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத் தலைவரும், வழக்கறிஞருமான துரைசாமி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், எச்.ராஜா போல் நீதிமன்றத்தை பகிரங்கமாக வேறு யாரேனும் விமர்சித்திருந்தால் போலீஸார் குண்டர் சட்டத்தில் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பர். ஆனால் எச்.ராஜா மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவில் தேசிய செயலாளராக இருப்பதால் அவர் மீதான வழக்கை போலீஸார் விசாரிக்கவே தயங்குகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா இன்று விசாரித்து, எச்.ராஜா மீதான வழக்கில் விசாரணையை முடித்து 2 மாதத்தில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் திருமயம் காவல் ஆய்வாளர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x