Published : 23 Jan 2020 10:06 AM
Last Updated : 23 Jan 2020 10:06 AM

குற்றங்களைக் கட்டுப்படுத்தியதில் 2-வது இடம்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் தேர்வு

தமிழகத்தில் இரண்டாவது சிறந்த காவல்நிலையமாக தேர்வான திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம்.

திண்டுக்கல்

குற்றங்களைக் கட்டுப்படுத்தியதற்காக திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் தமிழகத்திலேயே இரண்டாவது சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இயங்கிவரும் காவல்நிலையங்களில் சிறப்பாக செயல்படும் மூன்று காவல்நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு, சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வரின் பதக்கம் வழங்க காவல்துறை இயக்குனரால் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் காவல்நிலையங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில் கோயம்புத்தூர் நகரில் உள்ள சி 2 ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் முதலிடத்தில் தேர்வாகியுள்ளது.

திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் இரண்டாம் இடத்திற்கு தேர்வாகியுள்ளது. மூன்றாமிடத்திற்கு தருமபுரி மாவட்டம் தருமபுரி நகர் காவல்நிலையம் தேர்வாகியுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்களுக்கு ஜனவரி 26-ம் தேதி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரால் சிறந்த காவல்நிலையங்களுக்கான பதக்கம் வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதன் காரணமாக நிறைய குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பழிக்குபழியாக நடந்த கொலைகளில் குற்றவாளிகளை உடனுக்குடன் கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சத்து 33 ஆயிரத்து 250 மதிப்புள்ள நகைகள் திருடுபோனதில் உடனுக்குடன் தொடர்புடைய எதிரிகளைக் கைது செய்து குற்றவாளிகளிடமிருந்து 39 லட்சத்து 77 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள் தலைமறைவாக இருந்தநிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி நீண்டகாலம் நிலுவையில் இருந்த பிடிவாரண்ட் உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டன.

வாகன விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு வாகன தணிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்ததன் காரணமாக விபத்துக்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் நகர் வடக்குப் பகுதியில் சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட முயன்றவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்கண்ட நடவடிக்கைளின் அடிப்படையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் தமிழக அளவில் இரண்டாவது சிறந்த காவல்நிலையமாக தேர்வாகியுள்ளது.

திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் உலகநாதன், ஜனவரி 26 ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வரிடம் இருந்து சிறந்த காவல்நிலையத்திற்கான பதக்கத்தை பெறவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x