Last Updated : 22 Jan, 2020 04:46 PM

 

Published : 22 Jan 2020 04:46 PM
Last Updated : 22 Jan 2020 04:46 PM

'இதுவே கடைசியாக இருக்கும் அளவுக்கு சிவகாசி சம்பவ குற்றவாளிகள் மீதான நடவடிக்கை இருக்கும்': அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூசகம்

'இதுவே கடைசி சம்பவமாக இருக்கும் அளவுக்கு சிவகாசி சம்பவ குற்றவாளிகள் மீதான நடவடிக்கை இருக்கும்' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் சிவகாசியில் நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். சிறுமியின் குடும்பத்தாருக்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

சிவகாசி அருகே நேற்று முன் தினம் மாலை இயற்கை உபாதைகளைக் கழிக்கச் சென்ற 8 வயது சிறுமி ஒருவர் மாயமானார். சிறுமியை நீண்ட நேரம் தேடிய பெற்றோர், உறவினர்கள் மாரனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காலையில் முட்புதர்களுக்கு இடையே சிறுமி ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது மருத்துவர்கள் அறிக்கையில் உறுதியானது.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், "சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியன் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் குறித்த முழுத் தகவல் வெளிவந்தால் அது அனைவரின் மனங்களையும் கலங்கடிக்கும் செய்தியாக இருக்கும்.

இத்தகைய கொடூரத்தைச் செய்த குற்றவாளிகளைப் போலீஸார் விரைவில் கண்டுபிடிப்பார்கள். தமிழகத்தில் இதுவே கடைசி சம்பவமாக இருக்கும் அளவுக்கு சிவகாசி சம்பவக் குற்றவாளிகள் மீது எடப்பாடி அரசும் தமிழகக் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கும். என்கவுன்ட்டரை யாரும் விரும்பிச் செய்வதில்லை.

குற்றவாளிகளைப் பிடித்து நடவடிக்கை எடுப்பதே அரசுன் பொறுப்பு. போலீஸ் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகிறது. குற்றவாளிகளை நெருங்கிவிட்டனர். நேற்றுபிடிபட்ட வடமாநிலத்தவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து தகவல் வந்தவுடனேயே முதல்வர் என்னைத் தொடர்பு கொண்டு நேரில் பார்க்கச் சொன்னார். அந்தக் குடும்பத்துக்கான நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட பின்னர் முதல்வர் குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவி செய்வார்.

சிவகாசி வீரம் மிகுந்த மண். இங்கு துரோகம் செய்பவர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுக்க மக்களே தயாராக இருக்கிறார்கள்.
சிவகாசியில் பட்டாசு தொழில், அச்சுத் தொழிலில் வடமாநிலத்தவர்கள் அதிகமாக வேலை பார்க்கின்றனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் ஏற்கெனவே சேகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கணக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது" என்றார்.

'இதுவே கடைசி சம்பவமாக இருக்கும் அளவுக்கு சிவகாசி சம்பவ குற்றவாளிகள் மீதான நடவடிக்கை இருக்கும்' என அமைச்சர் கூறியவுடன் பத்திரிகையாளர்கள் ஆந்திராவில் கால்நடை பெண் மருத்துவர் சம்பவத்தில் நடந்ததுபோன்ற என்கவுன்ட்டர் நடைபெற வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு அமைச்சர் என்கவுன்ட்டரை யாரும் விரும்பிச் செய்வதில்லை என்று மட்டும் கூறியதால் அதில் ஏதோ சூசகம் இருப்பதாக சலசலக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x