

புதுச்சேரியில் தலைமைச் செயலர், ஜஜி வராததால் எம்பிக்கள் குழுவினர் பாதியில் கூட்டத்தை முடித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் நலன் பற்றி ஆய்வு செய்யும் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 11 பேர் அடங்கிய குழு புதுச்சேரிக்கு இன்று (ஜன.22) வந்தது. சேதராப்பட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளை ஆய்வு செய்தது. மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மனுக்களவையும் பெற்றனர்.
இந்நிலையில் இன்று தனியார் நட்சத்திர ஹோட்டலில் கலந்துரையாடல் ஆய்வு கூட்டம் காலையில் தொடங்கியது. நாடாளுமன்ற எஸ்சி, எஸ்டி குழு தலைவர் டாக்டர் கிரித் சோலங்கி தலைமை வகித்தார். புதுச்சேரி அரசின் வளர்ச்சி ஆணைய செயலாளர் அன்பரசு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை செயலாளர் பத்மா ஜெய்ஸ்வால், நலத்துறை செயலாளர் ஆலிஸ்வாஸ், உள்ளாட்சித்துறை செயலாளர் அசோக்குமார், சுகாதாரத் துறை செயலாளர் பிரசாந்த்குமார் பாண்டா, வருவாய் துறை செயலாளர் அருண், இந்து அறநிலையத்துறை செயலாளர் மகேஷ், பிசிஆர் பிரிவு எஸ்பி பாலகிருஷ்ணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் ஆகியோர் வந்திருந்தனர்.
கூட்டம் தொடங்கியபோது தலைமைச்செயலர் எங்கே என்று குழுத்தலைவர் கேள்வி எழுப்பினார். தலைமைச்செயலர், போலீஸ் ஐஜி ஏன் வரவில்லை என்று கோரினார். அதிகாரிகள் பதில் கூற தொடங்கியபோது, அவர்கள் வராததால் கோபமடைந்து கூட்டத்தை பாதியில் முடித்து கூட்டஅரங்கிலிருந்து வெளியேறினர். அதையடுத்து அரசு செயலர்கள் தலைமைச்செயலருக்கும், போலீஸார் ஜஜிக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் ஜஜி சுரேந்திர சிங் யாதவ் அங்கு உடனேயே வந்தார். எம்பிக்கள் குழுவை அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், அக்குழுவினர் ஏற்கவில்லை. ஹோட்டலில் இருந்து புறப்பட்டனர்.