Published : 22 Jan 2020 04:12 PM
Last Updated : 22 Jan 2020 04:12 PM

போராட்டங்களைத் தூண்டவில்லை; பிரச்சினைகளையே சுட்டிக்காட்டுகிறேன்: ஹைதராபாத் எம்.பி. ஒவைஸி மதுரையில் பேட்டி

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியனவற்றைப் பற்றிப் பேசுவது போராட்டங்களைத் தூண்டுவது ஆகாது என ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைஸி தெரிவித்துள்ளார்.

இந்திய மஸ்லிஜ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியனவற்றிற்கு எதிராக மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் எம்.பி. அசாதுதீன் ஒவைஸி. அவரை அக்கட்சியினர் மாவட்டத் தலைவர் காதர் பாட்சா தலைமையில் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒவைஸி, "குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியனவற்றால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார்.

உண்மையில் இவை இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவுகள் 14, 21 நல்கும் அடிப்படை விதிகளுக்கு எதிரானவை. அதனாலேயே இதை எதிர்க்கிறோம்.

குடியுரிமை திருத்தச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் உள்ளன.

நான் இவற்றில் உள்ள பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுகிறேனே தவிர போராட்டங்களைத் தூண்டவில்லை. இந்தியா ஜனநாயக நாடு. இது வடகொரியவோ, ஈராக்கோ அல்ல. இங்கு யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியனவற்றைப் பற்றிப் பேசுவது போராட்டங்களைத் தூண்டுவது ஆகாது

மீண்டும் சொல்கிறேன், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமித் ஷா கூறுவது எல்லாமே பொய்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x