Published : 22 Jan 2020 02:08 PM
Last Updated : 22 Jan 2020 02:08 PM

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: 28-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம்; ஸ்டாலின் அறிவிப்பு

ஹைட்ரோகார்பன் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.22) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் விவசாயிகள், பொதுமக்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல் மத்திய பாஜக அரசு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 341-க்கும் மேற்பட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ஆகியவை தேவையில்லை என்று, 16.1.2020 அன்று அறிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கி, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் மாபெரும் துரோகமாக திமுக இதனைக் கருதுகிறது.

மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், அவரது அமைச்சரவையிலேயே இருக்கும் சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், அனுமதி மற்றும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எல்லாம் நடத்த தேவையில்லை என்று இன்னொரு புறம் மத்திய அரசுக்கு நேரெதிரே கடிதம் எழுதி கோரிக்கை வைப்பதுமாக, விவசாயிகளை ஏமாற்றும் ஒரே நோக்கத்துடன் ஒரு கபட நாடகத்தை நடத்தி, ஹைட்ரோகார்பன் திட்டங்களைத் தடுத்து நிறுத்திட முயலாமல், அதிமுக அரசு முரண்பாடுகளின் மொத்த உருவமாகத் திகழ்கிறது.

எவ்வித அனுமதியும் பெறாமல், சுற்றுச்சூழல் சட்டங்களுக்கு உட்படாமல் இதற்கு முன் இருந்த எந்த மத்திய அரசும், இப்படி சர்வாதிகாரமாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை, விவசாய நிலங்களை அழித்து நிறைவேற்றிட எண்ணியதில்லை. ஆனால் தமிழக உரிமைகளுக்கும் விவசாயிகளின் நலன்களுக்கும் முற்றிலும் விரோதமாக மத்திய பாஜக அரசு தன்னிச்சையாகச் செயல்பட்டு, தமிழகத்தில் உள்ள வேளாண் பகுதிகளை பாலைவனமாக திட்டமிட்டு மாற்றிடத் துணிந்துள்ளது.

எனவே, மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அதிமுக அரசின் விவசாயிகள், வெகுமக்கள் விரோத செயல்களை கண்டித்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டங்களையும் திரும்பப் பெற்று, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்றும், 2020, ஜனவரி 28 (செவ்வாய்கிழமை) அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டத் லைநகரங்களில், திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x