Published : 22 Jan 2020 08:05 AM
Last Updated : 22 Jan 2020 08:05 AM

காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கடத்தல் வழக்கு: திமுக நிர்வாகி உட்பட 5 பேர் தலைமறைவு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 20 ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் இடங்களில் திமுக 10, காங்கிரஸ் 1 என திமுக கூட்டணி 11 இடம், அதிமுக 9 இடங்களில் வென்றன.

ஒன்றியக் குழுத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த 17-வது வார்டு ஒன்றிய கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கவேல் மனைவி ஜெயம் என்பவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த திமுகவினர் அவரை காரில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து, 19 கவுன்சிலர்களைக் கொண்டு தேர்தல் நடந்தது. அதில், ஒரு வாக்கு செல்லாதது என்பதால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவருக்கும் தலா 9 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, குலுக்கல் முறையில் அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சில தினங்களுக்குப் பிறகு தேர்தலில் பங்கேற்க விடாமல் தன்னை திமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாக அன்னவாசல் காவல் நிலையத்தில் ஜெயம் புகார் செய்தார்.

அதன்பேரில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரன், மாவட்டப் பொறியாளர் அணி அமைப்பாளர் எம்.செந்தில்குமார், நிர்வாகிகள் ராப்பூசல் கருப்பையா, கொங்கினிப்பட்டி பாலு, கருப்பப்பட்டி கணேசன் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது. தலைமறைவாக உள்ள சந்திரன்உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x