Published : 21 Jan 2020 03:40 PM
Last Updated : 21 Jan 2020 03:40 PM

பழநி தைப்பூசவிழா பிப்ரவரி 2-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்: 8-ம் தேதி தேரோட்டம்

பாதயாத்திரைக்கு பிரசித்திபெற்ற பழநி தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 2 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 8 ம் தேதி நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசதிருவிழா கொடியேற்றம் பிப்ரவரி 2 ம் தேதி ஞாயிறு அன்று காலை நடைபெறவுள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்விழாவில் தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். சுவாமி தந்தப்பல்லக்கு, வெள்ளிகாமதேனு, தங்கமயில் வாகனங்களில் தினமும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

விழாவின் ஆறாம் நாளான பிப்ரவரி 7 ம் தேதி இரவு 8 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், இதைத்தொடர்ந்து வெள்ளித்தேராட்டமும் நடைபெறவுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 8 ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. திராளன பக்தர்கள் வடம் பிடித்து தேரை நான்குரதவீதிகள் வழியாக இழுத்துவருவர். விழாவின் நிறைவாக பத்தாம் நாளில் தெப்பத்தேரோட்டம் நடைபெறும்.

தைப்பூச விழா தொடங்குவதற்கு முன்பே மதுரை, தேனி, கரூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். இதனால் விழா தொடங்குவதற்கு முன்னரே பழநி நகரில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x