Last Updated : 21 Jan, 2020 03:09 PM

 

Published : 21 Jan 2020 03:09 PM
Last Updated : 21 Jan 2020 03:09 PM

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி வழக்கு: கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரிய வழக்கில் கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தஞ்சை பெரிய கோயில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கோவில் ஆகம விதிப்படி ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. சைவ ஆகம விதிகளின்படி கட்டப்படும் கோயில்களில் பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும்.

பக்தி இலக்கியமான சைவத் திருமுறையில் தமிழ் மொழியில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நடைபெற்றதற்கு சான்றுகள் உள்ளன. இதை கோயில் கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

ஆகம விதிகள் மீறப்பட்ட போது பெரிய கோயிலில் விபத்துகள் நடைபெற்றுள்ளது. கடந்த 1997-ல் கோவில் குடமுழுக்கின் போது தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் இறந்தனர். அதே ஆண்டில் ஏர்வாடி மற்றும் கும்பகோணத்திலும் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பிப். 5-ம் தேதி நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குடமுழுக்கு சமஸ்கிருதத்தில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தினால் ஆகம விதிகள் மீறப்பட்ட போது நடைபெற்றது போல் விபத்துகள் நடக்கும் வாய்ப்பு ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

கடைசி குடமுழுக்கு எந்த மொழியில் நடத்தப்பட்டது? என நீதிபதிகள் கேட்டதற்கு, சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அப்போது தமிழில் அர்ச்சனை செய்ய பயிற்சி பெற்றவர்கள் இல்லை. தற்போது சைவ அர்ச்சகர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களைப் பயன்படுத்தி தமிழில் குடமுழுக்கு நடத்தலாம் என மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில், ஆகம விதிப்படியே குடமுழுக்கு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 27-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x