Published : 21 Jan 2020 12:57 PM
Last Updated : 21 Jan 2020 12:57 PM

என்பிஆர், என்ஆர்சியை அனுமதிக்கமாட்டோம் என தமிழக அரசு முடிவெடுக்கவேண்டும்: திமுக தீர்மானம்

தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை - ஒருமைப்பாடு கருதியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 550 பேர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், கூட்டணிக் கட்சிகளுடனான உறவு, உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, தோல்வி, வரும் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல், மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்

தீர்மானம் : 1 - வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி

உள்ளாட்சி மன்றத் தேர்தலில், மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி.
தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவிற்கு மகத்தான ஆதரவினையும் - மாபெரும் வெற்றியையும் வழங்கிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இந்தச் செயற்குழு கூட்டம் தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 512-ல் திமுக 242 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளுடன் 266 வார்டுகளிலும் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகளில் 5076-ல் திமுக 2090 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சியுடன் சேர்த்து 2,318 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

அதிமுக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டாலும், இவற்றையெல்லாம் மீறிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் ‘புதியதொரு அத்தியாயமாக’ அமைந்திருக்கிறது.

தீர்மானம் : 2 - மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தலை உடனே நடத்திடுக

திமுக தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, “9 மாவட்டங்களில் மூன்று மாதங்களுக்குள் முறையான வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடுப் பணிகளை முடித்து ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதை அலட்சியப்படுத்தியும், மீறும் வகையிலும் - தேர்தல் நடைபெறாத உள்ளாட்சி அமைப்புகளில், மேலும் ஆறு மாதங்கள் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீடித்திருக்கும் அதிமுக அரசுக்கு, இந்த செயற்குழுக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுவதையும் மதித்து - மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் உடனடியாக நடத்திட வேண்டும் என்று இந்தச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3 - தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்திடுக

அரசியல் சட்டத்திற்கு விரோதமான - நாட்டின் பன்முகத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் 2019-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்திடச் செய்து - மாநில மக்களின் எண்ணத்தைப் பிரதிபலித்திடும் வகையில், மாபெரும் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்தச் செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஈழத்தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் 2019-ம் வருட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு - மக்களவை - மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களித்து அதன் காரணமாகவே வெற்றிபெற வைத்து, நாட்டிலுள்ள மாணவர்களைப் போராட்டக் களத்தில் தள்ளியுள்ள அதிமுக அரசுக்கு இந்தச் செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“மக்களுக்கு பாதிப்பு இல்லை” என்று தொடர்ந்து மக்களைத் திசை திருப்பி - பாஜகவிவின் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலங்களிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ள நேரத்திலும், கேரள மாநில அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள சூழ்நிலையிலும் கூட, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (NRC) கண்மூடித்தனமாக அதிமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்றங்கள் தீர்மானமே நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் தனிநபர் தீர்மானத்தையும் சட்டப்பேரவையில் ஏற்க மறுத்து, தமிழக மக்களுக்கு அதிமுக அரசு மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிப்பதற்கான புதிய படிவங்களில் உள்ள கேள்விகள், “குடிமக்களைச் சந்தேகத்திற்கு உரியவர்களாகப் பதிவு செய்யலாம்” என்று மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், தகவல் அளிக்காதோர் மீது வழக்குப் போடும் அதிகாரம் அனைத்தும் நேர்மையானதொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிகுறிகளாக இல்லை என்பது ஆட்சியில் இருக்கும் அதிமுகவிற்கு தெரிந்திருந்தும் மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் துயரத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கும் பாஜகவின் செயலுக்கு உள்நோக்கத்துடன் துணை போவது மன்னிக்க முடியாத மாபாதகம் என்று இந்தச் செயற்குழு, அதிமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

ஆகவே, தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை - ஒருமைப்பாடு கருதியும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உடனடியாக அதிமுக அரசு அறிவிக்க வேண்டும்.

திருத்தச் சட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியான பதிவேடுகள் குறித்து விதண்டா வாதங்கள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: 4 - “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை” -அதிமுக அரசின் வஞ்சக நாடகத்திற்குக் கண்டனம்

2003 மற்றும் 2019 குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் கூட்டுக் குழுக்களில் எல்லாம் பங்கேற்றிருந்த அதிமுக, இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை குறித்தோ, இரட்டைக் குடியுரிமை குறித்தோ எந்தக் கட்டத்திலும் எதுவுமே பேசவில்லை. 2019 ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அதிமுக ஆதரவளித்த பிறகு, திடீரென்று “இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம்” என்று ஒரு கபட நாடகத்தை அதிமுக அமைச்சர்களும், முதல்வரும் அரங்கேற்றி ஏமாற்றி வருகிறார்கள்.

இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, இந்தியக் குடியுரிமை கோரி இந்திய வம்சாவளியினர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், “1955-ம் வருட இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. ஆகவே ரிட் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டது இதே அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும்தான்.

“தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் இடமில்லை” என்று மத்திய பாஜக அரசு உயர் நீதிமன்றத்திலேயே கூறிவிட்ட நிலையில், “இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்” என்று இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசுக்கு இந்தச் செயற்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 5 - இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கிடுக

திமுகவைப் பொறுத்தவரை, இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறையும், ஆர்வமும் கொண்டிருக்கிறது. கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரங்களில் எல்லாம், தமிழக மக்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி, திருமண நிதியுதவி, மருத்துவக் காப்பீடு, குழந்தைகளின் கல்வி உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் எல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்து - முகாம்களில் தங்கியிருக்கும் அவர்கள் கண்ணியமாக வாழ்வதற்கு வழி வகுத்ததை இந்த செயற்குழு மன நிறைவுடன் நினைவு கூர்கிறது.

முதல்வராக இருந்த தலைவர் கலைஞரின் ஆணையின் பேரில் - தமிழ்நாடு முழுவதும் உள்ள முகாம்களில், துணை முதல்வராக இருந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி அமைச்சர்கள் ஆய்வு செய்து அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசு என்பதை இந்த செயற்குழு பதிவு செய்கிறது.

“தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்” என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு. அதை நிறைவேற்ற தொடர்ந்து மத்திய அரசை கழகம் வலியுறுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவில் பேசியபோதும் இதை ஆணித்தரமாக திமுக வலியுறுத்தியிருப்பதை இந்த செயற்குழு பதிவு செய்கிறது.

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும், அவர்தம் விருப்பத்தின் அடிப்படையில், எவ்வித காலதாமதமும் இன்றி இந்தியக் குடியுரிமை வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அதிமுக அரசு, இரட்டைக் குடியுரிமை பற்றிப் பேசும் தமது இரட்டை நாக்குப் போக்கைக் கைவிட்டு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் இந்தச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு திமுக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x