

கொசஸ்தலை ஆற்றில் கழிவுகளை கொட்டியதற்காக, எண்ணூர் காமராஜர் துறைமுகம் ரூ.8 கோடியே 34 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் துறைமுகம் அருகில் உள்ள, காமராஜர் துறைமுகம், கடந்த 2016-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது உண்டான கழிவுகள், எண்ணூர் முகத்துவாரத்துக்கு உட்பட்ட சதுப்புநிலக் காடுகள் இருக்கும் இடங்களில் கொட்டப்பட்டன. இந்த கழிவுகளை அகற்றக்கோரி, எண்ணூரைச் சேர்ந்த ரவிமாறன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல், வடசென்னை அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொண்டு செல்லும் குழாய்கள் சேதமடைந்திருப்பதால், கொசஸ்தலை ஆற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கே.ஆர்.செல்வராஜ்குமார் என்பவரும் இதே அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த பசுமை தீர்ப்பாய அமர்வு, கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, பெற வேண்டிய இழப்பீடு குறித்து அறிக்கை அளிக்க மத்திய, மாநில மாசுகட்டுப்பாடு வாரியம், சென்னை ஐஐடி நிபுணர்கள் அடங்கிய குழுவை ஏற்கெனவே அமைத்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் அமர்வின் நீதித் துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வல்லுநர் குழு, ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது. அதை ஏற்க மறுத்து, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
எண்ணூர் கழிமுகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுகளைக் கொட்டி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, காமராஜர் துறைமுகமானது இடைக்கால இழப்பீடாக ரூ.8 கோடியே 34 லட்சத்தை, மத்திய மாசுகட்டுப்பாடு வாரியத்திடம் செலுத்த வேண்டும். அப்பகுதியில் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அங்கு சூழலை மீட்டெடுக்க 2023-ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்க முடியாது. குறுகிய காலத்தில் அனைத்து கழிவுகளையும் அகற்றி, குழாய்களை மாற்ற புதிய காலக்கெடுவை வல்லுநர் குழு நிர்ணயிக்க வேண்டும்.
அனல்மின் நிலையத்தால் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு பகுதிகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எவ்வளவு தொகையை இழப்பீடாக பெறலாம் என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்ட இடங்களை மறுசீரமைப்பு செய்தவற்கான செயல்திட்டத்தை உரிய நிபுணர்களை நியமித்து தயாரிக்க வேண்டும். இந்த உத்தரவுகளை பின்பற்றி, 4 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.