Published : 21 Jan 2020 07:19 AM
Last Updated : 21 Jan 2020 07:19 AM

மதுரையில் அடிக்கல் நாட்டி ஓராண்டாகிறது; ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி ஒதுக்குவது எப்போது?

பிரதமர் மோடி மதுரைக்கு வந்துஅடிக்கல் நாட்டிச் சென்று ஓராண்டாகியும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு இன்னும் திட்ட அறிக்கையும் (Project Report) தயாராகவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

டெல்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை (அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனை) சர்வதேச அளவில் புகழ் பெற்றது. 2015-ம் ஆண்டு தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு, மதுரையில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

இத்திட்டத்துக்கான அடிக்கல்நாட்டு விழா நடக்கும் வரை இத்திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலை இருந்தது. ஆனாலும்,கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு ஜன.27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.1,264 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 செவிலியர் படிப்பு (நர்சிங்) இடங்களுடன் பிரம்மாண்டமாக மதுரை அருகே தோப்பூரில் அமையவுள்ள இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டிச் சென்றார்.

இதற்கிடையே, நாட்டின் மற்றஇடங்களில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக்குழு நிறுவனத்திடம் கடனுதவியை எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்ததிட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தகவல் வெளியானது.

கடன் உதவி அளிக்கவுள்ள ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிதிக் குழுவினர் ‘பிரதம மந்திரி ஸ்வராஜ் சுரக்சா' இயக்குநர் சஞ்சய்ராய் தலைமையில், மதுரையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்குப் போதுமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதா? சாலை, விமான நிலைய வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆனாலும், தற்போது வரை நிதி ஒதுக்கப்படவில்லை. திட்ட அறிக்கையும் (Project Report) தயாராகவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த மருத்துவமனையை 2022-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை நிதி ஒதுக்கப்படாததால் இந்த திட்டம்அறிவித்து 5 ஆண்டுகள் கடந்தும்,பிரதமர் அடிக்கல் நாட்டி ஓராண்டுநிறைவடைந்தும் குறித்த காலத்துக்குள் இந்த மருத்துவமனை கட்டிமுடிக்க வாய்ப்பில்லை.

தற்போது 224.24 ஏக்கர் நிலம்மட்டும், மத்திய அரசு சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தைச் சுற்றி,ரூ.5 கோடியில் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘உலகத்தரத்தில் மருத்துவமனையைகட்டுவதற்கே ஜப்பான் நிறுவனத்திடம் கடனுதவி கேட்கப்பட்டுள்ளது.அவர்கள் பரிந்துரைக்கும் தரத்தை பயன்படுத்தி இந்த மருத்துவமனை கட்டப்படும்’’ என்றனர்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியதாவது: ஜைக்கா நிறுவனம்,வரும் மார்ச் மாதத்தில் எவ்வளவுகடன் வழங்குவோம் என்பது உள்ளிட்ட முழு விவரத்தையும் கொடுத்து விடும். கடன் எவ்வளவுகிடைக்கும் என்பதை பொறுத்துபட்ஜெட்டில் நிதி ஒதுக்குவதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், இந்த பட்ஜெட்டிலேயே சேர்க்க வலியுறுத்தி வருகிறேன். இதுவரை 3 முறை மக்களவையில் பேசிஉள்ளேன். 6 முறை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x