இந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி 

இந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி 
Updated on
1 min read

இந்தியை ஏற்க மாட்டோம் என்று திருவள்ளுவர் சிலை திறப்புக்குப் பின்பு முதல்வர் நாராயணசாமி உறுதியாகத் தெரிவித்தார்.

புதுச்சேரி தமிழ்ச் சங்க வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா இன்று இரவு நடந்தது.

முதல்வர் நாராயணசாமி சிலையைத் திறந்து வைத்து பேசியதாவது:

''தமிழை வளர்க்க புதுச்சேரி அரசு தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறது. உலக மொழிகளில் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் முக்கியமானது திருக்குறள் மட்டும்தான். எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் வரிகள் அடங்கிய நூல் திருக்குறள். உலகையே இரு வரிகளில் அடக்கியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்து இந்தியை நாட்டு மொழியாகவும், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும் தெரிவித்தது. இதையடுத்து நடந்த கூட்டத்தில் புதுச்சேரி அரசுத் தரப்பில் பங்கேற்று இந்தியை ஏற்கமாட்டோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளோம்.

ஆனால், இக்கூட்டத்தில் தமிழக அரசு அமைச்சர்கள் பங்கேற்கவே இல்லை. குறையாக இதைக் கூறவில்லை. தமிழ் மொழிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறோம் என்பதற்காக இதைத் தெரிவிக்கிறேன்''.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இந்நிகழ்வில் தலைமை வகித்து புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து பேசுகையில், "குறித்த நாளில் திருவள்ளுவர் சிலை புதுச்சேரியில் திறக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம், பேராசிரியர் அப்துல் காதர் மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in