Last Updated : 20 Jan, 2020 04:42 PM

 

Published : 20 Jan 2020 04:42 PM
Last Updated : 20 Jan 2020 04:42 PM

சுகோய்-30 ரக போர் விமானப் படைப்பிரிவு: பிபின் ராவத் தொடங்கி வைத்தார்

சுகோய்-30 ரக போர் விமானம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான தலைமைத் தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் 1940-ம் ஆண்டு விமானப்படை தளம் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் தஞ்சாவூர் விமானப்படை தளம் செயல்பாட்டில் இருந்தது. இங்கிலாந்து விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டன.

அதே நேரத்தில் தென்னிந்தியாவின் பாதுகாப்பு, குறிப்பாக அண்டை நாடுகள் மூலம் நமக்குப் பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படும்போது அவற்றை உடனடியாகச் சமாளிக்க தஞ்சாவூர் விமானப்படை தளத்தை அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுகோய் ரக போர் விமானங்கள் இங்கிருந்து இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 2013-ம் ஆண்டு தஞ்சாவூர் விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர், தரம் உயர்த்தப்பட்ட விமானத் தளமாக அறிவித்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். தொடர்ந்து இங்கு சுகோய் விமானங்கள் மூலம் போர் விமானிகளுக்குப் பயிற்சியும் தொடங்கி வைக்கப்பட்டது.

சுகோய்- 30 ரக போர் விமானத்திலிருந்து தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணை வீசும் சோதனை கடந்த 22.3.2019 ஆம் ஆண்டு விமானப்படையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் விமானப்படை தளத்தை மேலும் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், இங்கு சுகோய்-30 ரக விமானங்களை கொண்ட ஒரு விமானப்படைப் பிரிவை நிரந்தரமாக ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றன.

இதையடுத்து இந்திய விமானப்படையில் 'டைகா் ஷார்க்ஸ்' என்ற 222-வது போர் விமானப்படை பிரிவு தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 எண்ணிக்கையிலான சுகோய் -30 ரக போர் விமானங்களும் நிறுத்தப்படும்.

இந்த படைப்பிரிவை இன்று (ஜன.20) முப்படைகளுக்கான தலைமைத் தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விமானப்படை தலைமை தளபதி ஆர்கேஸ்.பதோரியா, விமானப்படை அதிகாரிகள் அதுல்குமார் ஜெயின், அமித் திவாரி, பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் ஜி.சதீஷ்ரெட்டி, இந்துஸ்தான் ஏரேநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

பின்னர், பிபின் ராவத் பேசியதாவது:

"முப்படைகளுடன் இந்தப் படைப்பிரிவை இணைப்பதால், எதிர்காலத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். பாதுகாப்புத் துறையில் இது மிகப்பெரிய மாற்றமாகும். முதன்முறையாக பிரம்மோஸ் ஏவுகனை விமானத்தில் பொருத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். பல ஆண்டுகளாக இந்த முயற்சி நடைபெற்று தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது" எனப் பேசினார்.

முன்னதாக, தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, சூரிய கிரன் எனப்படும் விமானங்களின் போர் அணிவகுப்பு நிகழ்ச்சியும், சுகோய் 30 - ரக போர் விமானம் பறந்து தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்தபோது அதற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்தியப் பெருங்கடல் அருகாமையில் உள்ளதால், இந்த தஞ்சாவூர் விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றது. சீனா, இந்திய பெருங்கடலில் தனது படை பலத்தை நிறுவுவதற்கும், தஞ்சாவூர் விமானப்படை தளத்தை தரம் உயர்த்துவதற்கும் தொடர்பில்லை. இருந்தாலும் நமது படைப்பிரிவை நாம் தரம் உயர்த்தியாக வேண்டும். தஞ்சாவூரில் இந்த படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அதிக அளவு வீரர்கள் சேர்க்கப்பட்டு, படை விரிவுபடுத்தப்படும்.

பாகிஸ்தானுடன் தற்போதைய சூழலில் போர் வர வாய்ப்பில்லை, இருந்தாலும் நம்முடைய படையை நாம் எப்போதும் தயார் நிலையிலேயே வைத்துள்ளோம்".

இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x