Published : 20 Jan 2020 03:31 PM
Last Updated : 20 Jan 2020 03:31 PM

மக்கள்தொகை பதிவேடு பணிகளை நிறுத்தக்கோரி முதல்வர், ஸ்டாலினிடம் மனு: மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டும் நடத்த கோரிக்கை

மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) ஆகிய இரண்டையும் இணைத்து நடத்துவது மக்களைப் பாதிக்கும். எனவே, என்பிஆர் பணியை நிறுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் இந்திய மக்கள் தேசிய மன்றம் மனு அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மக்கள் தேசிய மன்றம் சார்பில் அதன் நிர்வாகி ஐ.பி.கனகசுந்தரம் வெளியிட்ட அறிக்கை:

“சென்சஸ் , NPR ஆகிய இரண்டும் ஒன்றல்ல. இரண்டிற்கும் வெவ்வேறு சட்டங்கள். வெவ்வேறு நோக்கங்கள். சென்சஸ் சட்டம் 1948-ன் கீழ் நடத்தப்படும் சென்சஸ், அரசு மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்கள் உருவாக்கத் தேவைப்படும் புள்ளி விவரங்களை மக்களிடமிருந்து பெறப்படும் விவரங்களிலிருந்து பெற்றுத் தரும். நல்வாழ்வு திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உருவாக்க குடியுரிமைச் சட்டத்தின் (Citizenship Act,1955) கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை. NPR-NRC-CAA மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது; ஒரே நோக்கத்திற்கானது. அதாவது தேசப் பாதுகாப்பு (National Security). இது குடியுரிமையினைத் தீர்மானிக்கும் நோக்கம் கொண்டது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) ஆகிய இரண்டிற்கும் நோக்கம் வெவ்வேறாக உள்ளபோது, இரண்டும் வெவ்வேறு சட்டத்தின் கீழ் செயல்படும் போது இரண்டையும் இணைத்து 2020 ஏப்ரல் 1 முதல் நடத்தத் திட்டமிடுவது நியாயமற்றது. மக்களை ஏமாற்றக்கூடியதுமாகும்.

குடியுரிமைச் சட்டம் 1955, 2003-லும் 2019-லும் திருத்தப்பட்டுள்ளது. இத்திருத்தங்களில் கூறப்பட்டுள்ள கூறுகள் மக்கள் மனங்களில் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.

பதற்றமான சூழலில் வழக்கை விசாரிப்பதே கடினம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள சூழலில், மக்கள் மனங்களில் உருவாகியுள்ள பதற்றத்தையும் அச்சத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அரசு தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்து நடைமுறைப்படுத்த முயல்வது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது.

இந்திய அரசு இத்தகைய போக்கைக் கைவிட வேண்டும். NPR 2020-ஐ நிறுத்திவிட்டு Census 2021 க்கான வீட்டுக் கணக்கெடுப்பு (House Listing) மட்டும் சென்சஸ் சட்டம் 1948-ன் கீழ் 2020 ஏப்ரல் 1 முதல் நடத்த வேண்டும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) பணிகளை இணைத்து நடத்த இயலாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசிற்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

NPR 2020 பணிகளை தமிழ்நாட்டில் நிறுத்திட அரசாணை வெளியிட்டு, சென்சஸ் சட்டத்தின் கீழ் 2021 சென்சஸுக்குத் தேவைப்படும் வீட்டுக் கணக்கெடுப்பு (House Listing) பணியை மட்டுமே ஏப்ரல் 1 முதல் நடத்த வேண்டும்.

இதற்காக மக்களிடம் கேட்கப்படும் விவரங்கள் சென்சஸ் சட்டத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசினை இந்திய மக்கள் தேசிய மன்றம் கோருகிறது”.

இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

முதல்வரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடமும் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x