Published : 20 Jan 2020 12:14 PM
Last Updated : 20 Jan 2020 12:14 PM

அரசுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறக்கோரி மனு: அபராதம் விதிப்போம்; விஜயகாந்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

தன்மீது போடப்பட்ட அவதூறு வழக்குக்கு எதிராக அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திரும்பப்பெற அனுமதி கோரிய வழக்கில் விஜயகாந்துக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்து அனுமதி அளித்தது.

அதிமுக கூட்டணியில் இணைந்து 2011 சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் வெற்றிப்பெற்ற தேமுதிக எதிர்க்கட்சியாக அமர்ந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். சில மாதங்களிலேயே இரு தரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் நேரடியாக சட்டப்பேரவையில் மோதலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதையடுத்து அதிமுகவையும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார் விஜயகாந்த். கடந்த 2012-ம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அதிமுக அப்போதைய பொதுச்செயலாளர், முதலவர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்று பிறப்பித்தது. அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி விஜயகாந்த் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து விஜயகாந்த் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது மேல் மேல் முறையீட்டு மனு ஏற்கப்பட்டு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் ஆஜரான விஜயகாந்த் தரப்பு வழக்கறிஞர், அரசாணைக்கு எதிராக விஜயகாந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, “மேல் முறையீட்டு மனுவில் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி விட்டு, தற்போது வழக்கை வாபஸ் பெற அனுமதி கேட்பது, நீதிமன்ற நேரத்தை வீணடிப்பது போன்றது என்பதால் அபராதம் விதிக்கப்படும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் பேசிய பேச்சுக்கள் அவதூறானவை.

எதிர்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் தெரிவித்துள்ளதை கவனிக்கவும். அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதிக்க இது இடமில்லை” எனத் தெரிவித்தனர்.

பின்னர் விஜயகாந்த் தரப்பில் கேட்டுக் கொண்டதால் அபராதம் விதிப்பதை தவிர்ப்பதாக கூறிய நீதிபதிகள், எதிர்காலத்தில் இதுபோல செயல்படக் கூடாது என மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தினர். பின்னர் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x