Published : 20 Jan 2020 10:41 AM
Last Updated : 20 Jan 2020 10:41 AM

குடியரசு தின விழாவை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் காரணமாக பார்வையாளர்கள் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் உமா மகேஸ்வரன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா குடியரசாகி 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள விமான நிலையங்கள். ரயில் நிலையங்கள். மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் இன்று (20-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை 12 நாட்கள் விமான நிலைய வளாகத்தினுள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விமான நிலையத்தின் வெளிப்புற சுற்றுப்புற பகுதிகளில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலைய உள் வளாகம், விமான ஓடு பாதை ஆகியவற்றில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், விமான நிலைய வெளிபுறங்களில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, க்யூஆர்டி (QRT) என்னும் அதிவிரைவு அதிரடிப்படை ஆகியவற்றுடன் தமிழக போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் கடும் சோதனைக்கு பின்னரே விமான நிலைய வளாகத்தில் அனுமதிக்கப்படுகின்றன.

பயணிகளின் உடைமைகள் பரிசோதிக்கப்பட்டு அதன்பின்னரே பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பயணிகள் உடன் வருபவர்கள் வரும் ஜனவரி 31-ம் தேதி வரை விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x