

தமிழகத்தில் இன்று போலியோசொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் என 1,652 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக 1,000 நடமாடும் குழுக்கள் மற்றும் 3,000வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் போலியோ சொட்டு மருந்து முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கைசுண்டு விரலில் மை வைக்கப்படஉள்ளது.
தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் கண்டிப்பாக சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். சில தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாளில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் இன்றியமையாத தாகும். பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று சுகா தாரத் துறை தெரிவித்துள்ளது.