Last Updated : 19 Jan, 2020 09:21 AM

 

Published : 19 Jan 2020 09:21 AM
Last Updated : 19 Jan 2020 09:21 AM

வியாபாரத்தை விரிவுபடுத்திக்கொள்ள புதிய தொழில் நிறுவனங்களுக்கு ‘ஜெம்’ தரும் வாய்ப்பு: தொழில்முனைவோர் வரவேற்பு

அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு தேவை யான பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இது தொழில் முனைவோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அரசு நிறுவனங்களுக்கு தேவை யான பேப்பர், பென்சில், மேஜை, நாற்காலி முதல் அனைத்து வகையான பொருட்களையும் கொள்முதல் செய்வதற்காக, ‘Government e-Marketplace - GeM’ (ஜெம்) என்ற இ-மார்க்கெட் நிறுவனத்தை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இந்த நிறுவனம் வியாபார வாய்ப்புகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில், தொழில் முனைவோரின் தொடக்க நிலையில் உள்ள (ஸ்டார்ட்-அப்) நிறுவனங்களுக்கும் இந்நிறுவனம் வர்த்தக வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இதுகுறித்து ஜெம் நிறுவன அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தனியார் இ-காமர்ஸ் நிறுவனங்கள் போலவே மத்திய அரசின் ஜெம் நிறுவனம் செயல்படுகிறது. அரசு துறைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இது பாலமாக விளங்குகிறது.

தற்போது நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், 170 பொதுத் துறை நிறுவனங்களும் ஜெம் நிறுவனம் மூலமாகவே தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்கின்றன. பொருட்களை கொள்முதல் செய்ய, அரசு சார்பில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பதிவு செய்துள் ளன. இத்தகைய பொருட்களை வழங்க 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள், சேவை நிறுவனங்கள், 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் ஜெம் நிறுவனத்தில் பதிவு செய்துள்ளன.

இந்நிலையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள், வழங்கும் சேவைகள் அரசு துறைகளுக்கு பயன்படும் என்றால், ஜெம் நிறுவனத்தில் பதிவு செய்யலாம். மேலும், அவர்கள் தயாரிக்கும் பொருட்கள் புதிதாக இருந்தால், வழக்கமான விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருளின் விலை ரூ.50 ஆயிரம் அல்லது ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதை உடனடியாக ஜெம்மில் விற்க முடியாது. முதலில், தேவைப்படும் துறைக்கு அதை பரிசோதனை முறையில் வழங்க வேண்டும். அவர்கள் அதை பயன்படுத்தி, திருப்தி ஏற்பட்டால், ஜெம் இணையதளத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஆர்டர் பெறலாம்.

மேலும், மாநில அரசுகள் ஏதேனும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்தி, அதை எங்களுக்கு பரிந்துரை செய்தால், அதை ஜெம் இணையதளத்தில் விற்க செய்ய அனுமதி அளிக்கப்படும்.

ஜெம் நிறுவனத்தின் இந்த உதவி ஸ்டார்ப்-அப் நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், கடந்த 3 ஆண்டுகளுக்குள் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஜெம் இணையதளத்தில் (https://gem.gov.in/) பதிவு செய்துள்ளன. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x