Published : 18 Jan 2020 04:00 PM
Last Updated : 18 Jan 2020 04:00 PM

செய்தி நிறுவனங்கள் ஒத்துழைத்தால் போலி நிருபர்களைக் களைய அரசு நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி

செய்தி நிறுவனங்கள் ஒத்துழைத்தால் போலி நிருபர்களைக் களைய அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பத்திரிகை நிறுவனங்கள், இவர் தான் எங்களுடைய அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர் என்று அரசு பட்டியல் வழங்கினால் நன்றாக இருக்கும். இதனை நாங்கள் பேச்சுவார்த்தையின்போது பத்திரிகை நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளோம். அப்படி ஒத்துழைப்பு வழங்கும்பட்சத்தில் போலி நிருபர்களை களைய அரசு முனைப்போடு செயல்படும்.

பெரியார் குறித்து தவறாக பேசவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். யார் எப்படி பேசினாலும் அதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் எடுத்துக்கொள்ளலாம். நான் பேசியது சரி தான் என்றால் விவாதமாக எடுத்துக்கொள்ளலாம். நான் அந்த காரணத்தில் பேசவில்லை. நான் பேசியதில் ஒரு பாதியை தான் புரிந்து கொண்டுள்ளனர் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். எனவே, இதனை விவாதமாக எடுக்க வழியில்லை என நினைக்கிறேன்.

சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட நான்கைந்து அம்சங்களை வைத்து இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்ற விருதை மத்திய அரசு வழங்கி உள்ளது. தற்போது பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் பிரதிநிதியாக இல்லாததால், தமிழகத்தை தீவிரவாதிகளின் கூடாரம் என்று கூறுகிறார் என நினைக்கிறேன். ஆனால், மத்திய அரசை ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவில் அவர் அங்கம் வகிக்கிறார். அப்படியென்றால் மத்திய அரசு செய்தது தவறு என்கிறாரா?.

இல்லையென்றால் இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே நடப்புறவு சந்திப்பு நடந்ததன் காரணமாக தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று பாராட்டிய பிரதமரின் கூற்றை தவறு என்று கூறுகிறாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

களியாக்கவிளை என்பது கேரள மாநிலத்தின் எல்லை. அந்த தீவிரவாதிகள் அமைப்பினர் கூட கேரளாவில் தங்கியிருந்து தான் இங்கு வந்துள்ளனர். அவர்கள் தமிழகத்தில் தங்கவில்லை. அதனால் கேரள முதல்வர் கூட வந்து, அந்த இடத்தை பார்வையிட்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வு எங்கு நடந்தாலும் தவறு தான். ஆனால், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கும் அளவுக்கு பிரச்சினைகள் இல்லை.

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிறுபான்மையினரை பாதிக்காத அளவுக்கு அரசின் செயல்பாடு இருக்கும் என சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளோம். சிறுபான்மையினர் ஒருவர் கூட பாதிக்க அதிமுக அரசு துணை போகாது என்ற உத்தரவாதத்தை நாங்கள் வழங்கி உள்ளோம். ஸ்டாலின் அரசியலுக்காக சொல்வதற்கு எங்களால் பதில் சொல்ல முடியாது.

அதிமுக- பாஜ கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும். மேலும், சில கட்சிகள் இணையும். 2021 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x