Published : 17 Jan 2020 06:06 PM
Last Updated : 17 Jan 2020 06:06 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய வீரர் ரஞ்சித்துக்கு கார் பரிசு

சாதனை வீரர் ரஞ்சித்

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி சாதனை படைத்த வீரர் ரஞ்சித்துக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றவை.

தை 1, 2, 3-ம் தேதிகளில் முறையே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தை 3-ம் நாளான இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இன்று காலை அனைத்து முன்னேற்பாடுகளும் உறுதிசெய்யப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டனர். தென் மண்டல ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில் 2500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மொத்தம் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் மாலை 5 மணி வரை 650-க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன.

2 பேர் மரணம்; 15 பேர் காயம்:

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த 15 பேர் அவசர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாடுபிடி வீரர் -2 பேர், மாட்டின் உரிமையாளர் - 3 பேர். பார்வையாளர்கள் 8 பேர் என மொத்தம் 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்த இந்த 13 பேர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிட்சையில் பெற்று வருகின்றனர்.

சோழவந்தானை சேர்ந்த சட்டக் கல்லுரி மாணவர்ஸ்ரீதர் மாடு முட்டியதிலும், செக்கானூரணியை சேர்ந்த கொத்தனார் செல்லப்பாண்டி ஆகியோர் மரணம் அடைந்தனர்.

புதிய சாதனை படைத்த மாடுபிடி வீரர்..

இன்றைய ஜல்லிக்கட்டில், ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்த வீரர் ரஞ்சித் குமாருக்கு ஹூண்டாய் சான்ட்ரோ கார் பரிசாக அறிவிக்கப்பட்டது. இவர் தமிழக முதல்வர் பழனிசாமியிடம் சென்னையில் இதனை நேரில் பெற்றுக் கொள்கிறார்.
இதுதவிர முதல் பரிசு வென்ற வீரருக்கு பல்வேறு அமைப்பினரும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

குலமங்களத்தை சேர்ந்த மார்நாடு என்பவர் வளர்த்த கருப்பு என்ற காளை 12 மதிப்பெண் பெற்று முதல் பரிசை பெற்றது. இந்த காளை உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சான்ட்ரோ காரை சென்னையில் பரிசாக வழங்குகிறார்.

ஜல்லிக்கட்டில் இதுவரை எந்த ஒரு வீரரும் 16 காளைகளை ஒருசேர அடக்கியதில்லை. ரஞ்சித் புதிய சாதனை படைத்துள்ளார்.இ ண்டாவது பரிசை அழகர்கோயில் அருகே உள்ள ஆயத்தம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் வென்றார். இவர் 14 காளைகளை பிடித்தார். இவருக்கு சிடி.100 என்ற மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியைச் சேர்ந்த கணேசன் 13 காளைகளை அடக்கிய 3- பரிசு பெற்றார். அவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

வாகை சூடிய காளைகள்:

மாடுபிடி வீரர்களைப் போல் காளைகளும் பரிசுகளைக் குவித்தன. ஜல்லிக்கட்டு நிறைவில், குலமங்களத்தை சேர்ந்த மார்நாடு என்பவர் வளர்த்த கருப்பு என்ற காளை 12 மதிப்பெண் பெற்று முதல் பரிசை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த காளை உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சான்ட்ரோ காரை சென்னையில் பரிசாக வழங்குகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளரான அனுராதாவின் காளை 10 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பெற்று ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசைப் பெற்றது. இந்த காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றது குறிப்பிடித்தக்கது.

மூன்றாம் பரிசை ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவராக உள்ள ஜி.ஆர்.கார்த்திக்கின் காளை பெற்றது. இந்த காளை 9 மதிப்பெண்கள் பெற்று பரிசாக ரூ.10 ஆயிரம் வென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x