மருத்துவர் தாமதமாக வந்ததால் பிரசவத்தில் தாயும்,சேயும் பலி: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு

மருத்துவர் தாமதமாக வந்ததால் பிரசவத்தில் தாயும்,சேயும் பலி: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு
Updated on
1 min read

அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாமதமாக வந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

ராமநாதபுரம் ஆர்.எஸ் மடை பகுதி உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த நிறை மாத கர்ப்பிணி கீர்த்திகா பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் குழந்தை இறந்து பிறந்தது. இதன் பின்னர் கீர்த்திகாவும் உயிரிழந்தார். மருத்துவர் தாமதமாக வந்ததால், தாயையும், சேயையும் காப்பற்ற முடியவில்லை என உறவினர்கள் போராட்டம் நடத்தினர் .

இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது, இது தொடர்பான பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், மருத்துவர் தாமதமாக வந்ததால் நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த சேயும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ சேவைகள் துறை இயக்குனர் 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in