Published : 14 Aug 2015 05:56 AM
Last Updated : 14 Aug 2015 05:56 AM

ரூ.77 கோடி சிலை கடத்தல் வழக்கில் கைது: நான் புத்தி மோசம் போயிட்டேன் - இயக்குநர் வி.சேகர் வாக்குமூலம்

‘குடும்பப் பட இயக்குநர்’ என்று பெயரெடுத்த வி.சேகர், பழங்கால கோயில் சிலைகளை திருடிக் கடத்த முயற்சித்த வழக்கில் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். போலீஸாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மணிகண்டேஸ்வரர் கோயிலில் சிவன் - பார்வதி சிலை கடந்த ஜனவரி 6-ம் தேதி திருடு போயின. திருவண்ணாமலை மாவட்டம் பையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் 3 சிலைகளும், வந்தவாசி சவுந்தர்யபுரம் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 4 சிலைகளும் ஜனவரி 10-ம் தேதி திருடுப்போயின. இதையடுத்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ‘‘பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளில் அதிக தொகைக்கு விற்பனை செய்யும் கடத்தல் கும்பல் ஒன்று சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் சிலைகளைக் கொண்டு வந்துள்ளது’’ என்ற ரகசிய தகவல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கடந்த மே மாதம் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஒரு பையில் சிலையுடன் வந்த சென்னை தி.நகர் தனலிங்கம் என்பவரையும் அவரது நண்பர் கருணாகரனையும் கைது செய்தனர்.

தனலிங்கம் சினிமா தயாரிப்பு மேலாளர். கருணாகரன் அரசு அச்சகத்தில் பணிபுரிபவர். இருவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 7 சிலைகள் மீட்கப்பட்டன. சிலை கடத்தலில் பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகருக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் இருவரும் கூறியது போலீஸாரை அதிர்ச்சி அடையவைத்தது.

1990-2000 காலகட்டத்தில் ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்று அடுத்தடுத்து குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி ‘குடும்பப்பட இயக்குநர்’ என்றே அழைக்கப்பட்டவர் வி.சேகர். பெண்களின் மனம் கவர்ந்த இயக்குநராக இருந்தவர். வெளி வட்டாரத்திலும் நற்பெயர் சம்பாதித்தவர் என்பதால் அவர் மீதான புகாரை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை போலீஸார் திரட்ட சிறிது கால அவகாசம் எடுத்துக்கொண்டனர்.

சிலை கடத்தலில் வி.சேகருக்கு தொடர்பு இருக்கிறது என்ற தகவல், பொருளாதார குற்றப்பிரிவில் உள்ள 2 உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். தகவல் கசிந்தால், அவர் உஷாராகி தப்பித்துவிடலாம் என்பதால் மற்றவர்களுக்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருந்தனர்.

இதற்கிடையே சிலை கடத்தல் வழக்கில் கைதான கருணாகரனின் சகோதரி மாலதி அப்ரூவராக மாற விரும்புவதாக அவரது வழக்கறிஞர் ஒருவர் மூலம் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சைதை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த 23-ம் தேதி ரகசிய வாக்குமூலம் அளித்தார். சிலை கடத்தலில் வி.சேகருக்கு உள்ள தொடர்பு குறித்து அப்போது விளக்கமாக தெரிவித்துள்ளார்.

பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள வி.சேகர் வீட்டுக்கு போலீஸார் நேற்று முன்தினம் சென்றனர். ‘நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை’ என முதலில் பிடிவாதம் காட்டிய சேகர் தனக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் அளித்த பெண்ணை அங்கு நேரில் பார்த்ததும் மனமுடைந்தாராம். ‘நான் புத்தி மோசம் போயிட்டேன் சார்’ என்று எல்லா தகவல்களையும் கூறினார் என்கின்றனர் போலீஸார். பிரபல இயக்குநராக இருந்த வி.சேகர், சிலைக் கடத்தல் வழக்கில் கைதாகியிருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட 8 சிலைகள், ராஜராஜ சோழனுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை. இவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.77 கோடி என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சேகரை போலீஸார் நேற்று முன்தினம் இரவே நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 11 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

குடும்பப் படங்களை இயக்கி பிரபலமானவருக்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?

இயக்குநர் வி.சேகர் தன் மகன் கார்ல் மார்க்ஸை வைத்து ‘சரவணப் பொய்கை’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். அந்த படத்துக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் மிகுந்த சிக்கலில் இருந்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வருவதுபோல, இரிடியம் விற்பனை செய்யும் ‘ரைஸ் புல்லிங்’ மோசடி கும்பலிடம் சிக்கி சில மாதங்களுக்கு முன்பு பெரும் தொகையை இழந்துள்ளார்.

அப்போது, ரெட்ஹில்ஸ் ஜெயக்குமார் தலைமையிலான சிலை திருட்டு கும்பல், சினிமா தயாரிப்பு மேலாளர் தனலிங்கம் மூலமாக சேகரை அணுகியுள்ளது. தாங்கள் திருடிய சிலைகளை வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் மூலம் பெரும் தொகைக்கு விற்பனை செய்து தருமாறு சேகரை கேட்டுள்ளனர். சேகரும் ஒப்புக்கொண்டு, சிலைகளை கே.கே.நகரில் உள்ள தனது ‘திருவள்ளுவர் கலைக்கூடம்’ சினிமா தயாரிப்பு அலுவலகத்தில் வைத்துள்ளார்.

ஒரு மாதமாகியும் அவற்றை விற்க முடியவில்லை. இதனால் வெறுத்துப்போன கும்பல், அவரிடம் இருந்து சிலைகளை எடுத்துச் சென்றது. வேறு இடத்தில் பதுக்கிவைத்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டபோதுதான் போலீஸில் சிக்கியுள்ளனர்.

கருணாகரனின் சகோதரி மாலதி ஒரு மாத இதழ் நிருபர். கடந்த ஜனவரி 6-ம் தேதி சிலையை திருடி காரில் கொண்டுவந்தபோது வந்தவாசி அருகே ரோந்து போலீஸார் சந்தேகத்தின் பேரில் அந்த காரை பிடித்து சோதனை செய்துள்ளனர். நிருபரான தான் ஒரு கூட்டத்துக்குப் போய்விட்டு சென்னை திரும்பிக்கொண்டிருப்பதாக கூறி, அவர்களிடம் இருந்து மாலதி தப்பி வந்துள்ளார். போலீஸார் சோதனை செய்திருந்தால் சிலை கடத்தல் கும்பல் அப்போதே சிக்கியிருக்கும்.

மாலதி ரகசிய வாக்குமூலம் அளிக்கப்போகிறார் என்பதை அறிந்த கும்பல், அவரை நீதிமன்றத்தில் இருந்து வழிமறித்து கடத்திச் செல்லவும் திட்டம் போட்டிருக்கின்றனர். டிஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை. மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் கொடுத்த மாலதியை சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் போன் செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேறு சிலை திருட்டு சம்பவங்களில் சேகருக்கு தொடர்பு உள்ளதா என்று அறிய அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். சிலை திருட்டு கும்பலில் ஒரு மாதப் பத்திரிகையின் பெண் நிருபர், போலீஸ் எஸ்ஐ, கல்லூரி மாணவர் உட்பட 15 பேர் உள்ளனர். இப்போது 3 பேர் மட்டுமே போலீஸில் சிக்கியுள்ளனர். மற்றவர்களை கைது செய்யவும் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சேகர் கைது செய்யப்பட்டது குறித்து அவரது மகன் காரல் மார்க்ஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

விசாரணைக்கு என்று கூறித்தான் அப்பாவை போலீஸார் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில், சிலை திருட்டு தொடர்பாக கைது செய்வதாக தெரிவித்தனர். அப்பாவுக்கு இதில் சிறிதும் தொடர்பு இல்லை. இந்த வழக்கில் அவரை சிக்கவைக்க என்ன சூழ்ச்சி நடந்தது என தெரியவில்லை. எனினும் இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x