Published : 16 Jan 2020 09:57 AM
Last Updated : 16 Jan 2020 09:57 AM

களைகட்டியது மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு: களத்தில் 700 காளைகள்; 930 வீரர்கள்

பாலமேடு

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு காலை 8 மணியளவில் கோலாகலமாகத் தொடங்கியது. பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.

அவற்றில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தை 1,2,3 தேதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

இந்நிலையில், அவனியாபுரத்தில் தை 1-ம் நாளான நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

முன்னதாக மாடுபிடி வீரர்கள் அமைச்சர், ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவதாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இன்றைய ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தம் 700 காளைகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு முறை களமிறக்கப்படும் வீரர்களைத் தனியாகக் கண்டறிய பிரத்யேக டி ஷர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டில் இன்று காலை தொடங்கியதிலிருந்து இதுவரை மூவர் காயமடைந்துள்ளனர். இருவர் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் 2000 போலீஸார்..

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐஜி சண்முக ராஜேஸ்வரன் அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2 எஸ்.பி., 8 ஏடிஎஸ்பி தலைமையில் பாதுகாப்புப் பணியில் 2000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்" என்றார்.

ஜல்லிக்கட்டு நினைவு தூண் அமைவது எப்போது?

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக போராடிய இளைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் ஜல்லிக்கட்டு நினைவு தூண் அமைக்கப்படும். நினைவுத் தூண் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. அலங்காநல்லூர் அல்லது பாலமேடு அல்லது இரண்டு ஊர்களுக்கும் பொதுவான இடத்தில் தூண் நிறுவப்பட்டு அடுத்த ஜல்லிக்கட்டு போட்டியின்போது திறக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x