Published : 14 Jan 2020 09:31 PM
Last Updated : 14 Jan 2020 09:31 PM

தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு மவுனம் காத்தால் பெரும் போராட்டம்: ஸ்டாலின் எச்சரிக்கை

தேசிய குடிமக்கள் பதிவேடு அமல் படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து அமைதி காத்தால் நாடே திரும்பிப் பார்க்கும் போராட்டத்தை அனைத்து கட்சி, அமைப்புகளுடன் சேர்ந்து திமுக நடத்தும் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித அறிக்கை:

“நாடு முழுவதும் மக்கள் கொதித்தெழுந்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் அதிமுக அரசு தொடர்ந்து மௌனம் காத்து வருவது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

மத்திய பாஜக அரசு தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு கொண்டுவரும் உள்நோக்கம் குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கு தான் என்ற அடிப்படை உண்மையை மறைக்கும் முயற்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், முதலமைச்சர் பழனிசாமி தேசிய குடிமக்கள் பதிவேடு கிடையாது, நாங்கள் கணக்கெடுக்கவில்லை என்று கூறி தமிழக மக்களை திசை திருப்புவது கவலை அளிக்கிறது.

சிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியில் பெரும் பாதிப்பு என்பதை அறிந்து தான் திமுக சார்பில் நானே இந்த பிரச்சினையை எழுப்பினேன். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தோ, தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும் என்றோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை என்று கூறிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், எதிர்க்கட்சியினர் அச்சம் அடிப்படையற்றது என வாதாடினார்.

குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்து, வாக்களித்து நாடு முழுவதும் போராட்டம், கலவரம் ஏற்படக் காரணமான அதிமுக அரசு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கொடுத்த தீர்மானத்தை விவாதத்திற்கே ஏற்க மருத்தது. கேரள மாநில அரசு குடியுரிமைச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் அதை பின்பற்றி ஒரு தீர்மானத்தை அரசின் சார்பில் நிறைவேற்ற தைரியமின்றி மத்திய பாஜக அரசுக்கு அஞ்சி நடுங்கி கைகட்டி நின்றது அதிமுக அரசு.

இந்நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகள் தற்போது தற்போது புதிய வடிவம் புதிய படிவம் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கும் விவரங்கள் எல்லாம் தேசிய மக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு தேவையான விவரங்களும் பொதுவெளிக்கு வந்துவிட்டன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றன.

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நாடுமுழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்ற ஒன்று, அதை பீகார் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன் என்று துணிச்சலாக அறிவித்துள்ளார். அஸ்ஸாமில் ஆளும் பாஜக மாநில முதல்வரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இவ்வளவுக்கும் பிறகும் அதிமுக அரசு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கு ஆதரவாக இருப்பதும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க கண்ணை மூடிக்கொண்டு வழிவிடுவதும், கடும் கண்டனத்திற்குரியது.

தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கவும், 2003 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்த கட்சி அதிமுக, இப்போது ஈழத்தமிழர்களையும், சிறுபான்மை இன மக்களையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் ஆதரவு அளித்ததும் அதிமுக. இலங்கைத் தமிழருக்கு இரட்டை குடியுரிமை கேட்டுள்ளோம் என்று இப்போது கூறும் அதிமுக அந்த நிலைக் குழுக் கூட்டத்தில் இதுபற்றி முணுமுணுப்பு கூட காட்டவில்லை.

இப்போது அந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வாக்களித்து வெற்றி பெற வைத்தது அதிமுக நாட்டையே ரணகளமாக்கியுள்ள சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்து விட்டு இன்றைக்கு மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று என்பிஆர், என்சிஆர் பற்றி எங்களுக்கு அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்று தமிழக மக்களை ஏமாற்றி வருவதை உடனடியாக அதிமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நேற்றைய தினம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை செயல்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்து திமுக போராட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஏற்கனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு வழிகோலும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மக்களவை மாநிலங்களவை திமுக வாக்களித்துள்ளது.

சட்டம் நிறைவேற்றிய பிறகு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடத்தினோம். சட்டமன்றத்திலும் அது குறித்து வலியுறுத்தி அதிமுக அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து உள்ளோம். ஆனாலும் அதிமுக அரசு நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த அலட்சியமான மூன்றுகால் மனப்பான்மையை திமுக மட்டுமல்ல, தமிழக மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மக்களுக்கு நெருக்கடியும் துயரம் தரும் கணக்கெடுப்பு குறித்து தொடர்ந்து அதிமுக அரசு அமைதி காத்தால் விரைவில் மாபெரும் போராட்டத்தை நாடே திரும்பிப் பார்க்கும் ஜனநாயக ரீதியிலான அறப்போராட்டத்தை இணக்கமான கருத்துடைய கட்சிகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுடன் திமுக நடத்தும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”.


இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x