Last Updated : 14 Jan, 2020 04:40 PM

 

Published : 14 Jan 2020 04:40 PM
Last Updated : 14 Jan 2020 04:40 PM

மன அழுத்தத்தைக் குறைக்க குடும்பத்துடன் ‘தர்பார்’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்த சிவகங்கை போலீஸார்: எஸ்.பி. சிறப்பு ஏற்பாடு

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ரோஹித்நாதன் சிறப்பு ஏற்பாட்டில் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் போலீஸார் தங்களது குடும்பத்துடன் ‘தர்பார்’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் இமானுவேல் சேகரன், மருதுபாண்டியர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது நினைவுதினம், அதைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் என போலீஸார் தொடர்ந்து இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல் ஒருவித அழுத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கூட்டணியில் உருவான ‘தர்பார்’ திரைப்படம் ஜன.9-ம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த திரைப்பட் போலீஸை பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது.

இதையடுத்து தொடர்ந்து பணிசெய்துவந்த சிவகங்கை மாவட்ட போலீஸாரின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் சலுகை விலை டிக்கெட்டில் ‘தர்பார்’ திரைப்படம் பார்க்க மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் சிறப்பு ஏற்பாடு செய்தார்.

சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில், பூவந்தி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட காவல்நிலையம் மற்றும் சிவகங்கை ஆயுதப்படையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போலீஸார் தங்களது குடும்பத்துடன் மானாமதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று காலை 10 மணிக்கு ‘தர்பார்’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு செல்ல உள்ளோம். அதற்கு முன்னதாக குடும்பத்துடன் திரைப்படம் பார்த்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தத் திரைப்படம் போலீஸ் அதிகாரி பெருமைப்படுத்தும் விதமாக உள்ளது. திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்த எஸ்பிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x