Last Updated : 14 Jan, 2020 04:21 PM

 

Published : 14 Jan 2020 04:21 PM
Last Updated : 14 Jan 2020 04:21 PM

தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பாதயாத்திரை பக்தர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை (ஜன. 15) கொண்டாடப்படவுள்ள நிலையில் வழக்கம் போல் கடந்த சில நாட்களாக திருச்செந்தூருக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

திருநெல்வேலி, பாபநாசம், வி.கே. புரம், பாவூர்சத்திரம், தூத்துக்குடி, விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்துள்ளனர்.

திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலை, தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலை, நாகர்கோவில்- திருச்செந்தூர் சாலை போன்ற திருச்செந்தூரை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சாரை சாரையாக செல்வதை காண முடிகிறது.

முருக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். இதனால் திருச்செந்தூரில் எங்கு பார்த்தாலும் பக்தர்களே காணப்படுகின்றனர். இன்றும், நாளையும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு பூஜைகள்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறும்.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் செயல் அலுவலர் சா.ப.அம்ரித் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x