

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்களின் போராட்டத்துக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜேஎன்யு வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் மாணவர்கள் மீது கடந்த 5-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவர்களை சந்தித்து பல்வேறு தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின்நேற்று ஜேஎன்யு வளாகத்தில் போராடி வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவருடன் இளைஞரணி துணைச் செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ஜோயல், மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திமுக மாணவரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன் உள்ளிட்டோர் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி கூறியதாவது:தாக்குதலுக்கு ஆளான ஜேஎன்யு மாணவர்களை திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சந்தித்தேன். கல்விக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 78 நாள்களுக்கு மேல் அமைதியான முறையில் போராடியவர்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் திசைதிருப்பவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிமிடம் வரை,தாக்குதலுக்கு உள்ளானவர்களைத் துணைவேந்தர் சந்திக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மாணவர்களைத் தாக்கிய குண்டர்கள் யாரெனத் தெரிந்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. குண்டர்களைப் பாதுகாப்பவர்கள், நாட்டை எப்படிப் பாதுகாப்பார்கள் என நினைக்கையில் அச்சமாக இருக்கிறது.
இவ்வாறு உதயநிதி கூறினார்.