

இரட்டை குடியுரிமை என்று இலங்கைத் தமிழர்களை அதிமுக அரசு ஏமாற்றி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக வாக்களித்தது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று மத்தியஅரசிடம் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வாங்கித் தரப்போவதாக நாடகம் நடத்தி வருகிறது அதிமுக அரசு. இதனை சென்னைப் பல்கலைக் கழக குற்றவியல் துறையின் மூத்த ஆய்வாளர் பேராசிரியர் இரா.இளம்பரிதி அம்பலப்படுத்தி உள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற்றுத் தருவோம் என்ற அதிமுக அரசின் பொய் வாக்குறுதிக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட ஊடகங்கள், இந்தப் பேராசிரியரின் உண்மை அறிக்கையை முழுமையாக வெளியிட முன்வருமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.