Published : 12 Jan 2020 07:31 AM
Last Updated : 12 Jan 2020 07:31 AM

கரூர் மாவட்டத்தில் அனைத்து பதவிகளையும் அள்ளியது அதிமுக

கரூர்

கரூர் மாவட்ட ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இதில் அதிமுக 9, திமுக 3 இடங்களில் வெற்றி பெற்றன. மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவராக எம்.எஸ்.கண்ணதாசன், துணைத் தலைவராக என்.முத்துகுமார் என அதிமுகவைச் சேர்ந்த இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் 115 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் கரூர் ஒன்றியத்தின் 13 வார்டுகளில் 9, அரவக்குறிச்சி ஒன்றியத்தின் 11 வார்டுகளில் 7, தோகைமலை ஒன்றியத்தின் 15 வார்டுகளில 10, தாந்தோணிமலை ஒன்றியத்தின் 13 வார்டுகளில் 8, குளித்தலை ஒன்றியத்தின் 10 வார்டுகளில் 6,க.பரமத்தி ஒன்றியத்தின் 17 வார்டுகளில் 9, கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தின் 20 வார்டுகளில் 10, கடவூர் ஒன்றியத்தின் 16 வார்டுகளில் 8 என 66 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. திமுக 33 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 3 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவில் பட்டியலின பெண் ஒருவரும் வெற்றி பெறாத நிலையில் திமுக சார்பில் 7-வது வார்டு ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வான அ.சந்திரமதியை அதிமுகவுக்கு இழுத்து, அதிமுக ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர். அதேபோல, 18-வது வார்டில் சுயேச்சையாக வெற்றி பெற்ற கவிதாவை துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x