Published : 29 Aug 2015 08:25 AM
Last Updated : 29 Aug 2015 08:25 AM
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டுள்ளது என்று உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய் கூறினார்.
திருவள்ளுவர் திருநாட்கழகம் சார்பில் ஹரித்வாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவரின் கற்சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான சிலை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த சிலையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று முன்தினம் நடந்தது.
திருவள்ளுவர் சிலையை உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய்யிடம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் வழங்கினார். நிகழ்ச்சியில் தருண் விஜய் பேசியதாவது:
கங்கைக் கரையில் திருவள்ளு வர் சிலை அமைக்கப்பட உள்ளது. திருக்குறளை வட மாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளாமல் போனது துரதிருஷ்டமான விஷயம். இப்போது அதற்காக நிறைய பேர் வருத்தப்படுகின்றனர்.
கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது திருக்குறளை மேற்கோள்காட்டி பேசி வருகிறேன். அதற்கு மாணவர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர், லூதியானா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக நடத்தப்படுகிறது.
இவ்வாறு தருண் விஜய் பேசினார்.
நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசும்போது, ‘‘திருக்குறளை பின்பற்றினால் தமிழர்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள அத்தனை மனிதர்களும் மகிழ்ச்சியுடன் வாழலாம். திருவள்ளுவர் எந்த அடையாளமும் இல்லாதவராய் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளை தந்தவர். அவரை யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடலாம்’’ என்றார்.
தமிழ் ஆலயம்
“எல்லோரும் உற்றுநோக்கும் வண்ணம் கங்கைக் கரையில் தமிழ் ஆலயம் ஒன்றை எழுப்ப வேண்டும்” என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேசும்போது, ‘‘திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இதுதான் சரியான தருணம். அதற்கான முயற்சிகளை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எடுக்க வேண்டும்’’ என்றார். முன்னதாக திருவள்ளுவர் திருநாட்கழகம் அமைப்பின் தலைவர் சுவாமி தியாகராஜன் வரவேற்புரையாற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT