

நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த தோடர் பழங்குடியினரான பொன்தோஸ் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 80 சதவீத இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் போட்டியிட்ட தோடர் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பொன்தோஸ் போட்டியின்றி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்குத் தேர்தல் அதிகாரி, மாவட்ட ஊராட்சித் தலைவராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியது. கூடலூர் ஊராட்சித் ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த கீர்த்தனா வெற்றி பெற்றார். குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தேர்தலில் திமுக வேட்பாளர் சுனிதா வெற்றி பெற்றார். கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த கே.ராம்குமார் வெற்றி பெற்றார்.
பழங்குடியினருக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வாய்ப்பு அளித்ததற்கு பொன்தோஸ் நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் தோடர் பழங்குடியின சமுதாயத்தில் இருந்து ஒருவர் முதன்முறையாக மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.