Published : 11 Jan 2020 09:11 AM
Last Updated : 11 Jan 2020 09:11 AM

மனைவியை ஊராட்சி  துணை தலைவராக்க மதுவில் விஷம் கலந்த கணவர்: ஒருவர் மரணம், மற்றொருவருக்கு சிகிச்சை

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருக்கூரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவர் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40), சரவணன் (44) மற்றும் சுப்பையா பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (52) ஆகியோர் கடந்தமாதம் 30-ம் தேதி இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

மது குடித்த தியாகராஜன், செந்தில்குமார் ஆகிய இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இருவரும் பரமத்தி வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் செந்தில்குமார் உயிரிழந்தார். தியாகராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், ஆறுமுகம், செந்தில்
குமார் ஆகியோரின் மனைவிகள் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் ஆறுமுகம் தனது மனைவியை துணைத் தலைவராக கொண்டுவருவதற்கு, செந்தில்குமார் இடைஞ்சலாக இருப்பார் எனக் கருதி, அவருக்கும் அவரது நண்பர் தியாகராஜனுக்கும் மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார் என்பது உள்ளிட்ட விவரம் தெரியவந்தது.

இதுகுறித்து ஆறுமுகம், சரவணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x