Published : 11 Jan 2020 07:15 AM
Last Updated : 11 Jan 2020 07:15 AM

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கானோர் பக்தி பெருக்குடன் திரண்டனர்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாதிரையையொட்டி நேற்று நடராஜருக்கு நடைபெற்ற அபிஷேகம்.

கடலூர்

சைவத் திருத்தலங்களில் முதன்மை பெற்றதான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நடக்கும் இவ்விழாவில். நாள்தோறும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், காலை, மாலையில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றன. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

முக்கியத் திருவிழாவான ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது.

தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி
யளித்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. பின்பு மாலை 5 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்கிட வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் கூறியபடி செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னுக்கும், பின்னுக்கும் சென்று நடனமாடி பாடியபடி பக்தர்களுக்கு காட்சியளித்து, சித்சபைக்கு சென்றனர். இக்காட்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசித்தனர்.

ஆருத்ரா தரிசனத்தையொட்டி நத்தனார் பட ஊர்வலமும் நடந்தது. பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.
வெளிநாட்டு, வெளி மாநில மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்
திருந்தனர். கடலூர் எஸ்பி அபிநவ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (11-ம்
தேதி) இரவு பஞ்சமூர்த்திகள் முத்து பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. தரிசன விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

தி.மலையில் மை பிரசாதம்

இதேபோன்று, திருவண்ணா மலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழாவெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் உள்ள 5-வது பிரகார ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவுசிறப்பு அலங்காரத்தில் சிவகாம
சுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளினார். அப்போது, சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப் பட்டது.

இதைத்தொடர்ந்து நடராஜருக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரையில் சேகரிக்கப்பட்ட தீபச்சுடர் மை பிரசாதம், நடராஜருக்கு சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூரில் பாத தரிசனம்

இதேபோன்று, திருவாரூர் தியாகராஜர் கோயிலில், திருவாதிரையையொட்டி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
திருவாதிரை நாளில் திருக்கயிலாயத்தில் நடராஜ பெருமானின் நடனத்தை பார்க்க தேவர்கள் விரும்பியதாகவும், அப்போது நடராஜர் நடனம் ஆடியபோது இடதுகாலை சிதம்பரம் கோயிலிலும், வலது காலை திருவாரூர் தியாகராஜர் கோயிலிலும் காட்டிய
தாகவும் ஐதீகம். அதையொட்டி, திருவாதிரை நாளில் பாத தரிசனம் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்வு நேற்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x