பள்ளி மாணவனை மலம் அள்ள வைத்த  ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை: நாமக்கல் நீதிமன்றம் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பள்ளி மாணவனை மலம் அள்ள வைத்த வழக்கில் ஆசிரியை ஒருவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார் அருகே எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (35). இவர் நாமக்கல் ராமாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு 12-ம் தேதி பள்ளியைச் சேர்ந்த 2-ம் வகுப்பு மாணவர் ஒருவரை மலம் அள்ளச் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை, நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆசிரியை விஜயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜன.10) நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in