Published : 10 Jan 2020 03:14 PM
Last Updated : 10 Jan 2020 03:14 PM

சிறந்த நல்லாட்சி மாநிலம்; மத்திய அரசுக்கு தலையாட்டி பொம்மையாகச் செயல்பட்டால் இப்படித்தான் சான்றிதழ் கிடைக்கும்: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

மத்திய பாஜக அரசின் அனைத்து முடிவுகளுக்கும் தலையாட்டி பொம்மையாக தமிழக அரசு மாறியதால் சிறந்த நல்லாட்சி சான்றிதழை அடிப்படை ஆதாரமில்லாமல் பாஜக அரசு வழங்கியிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“இந்தியாவிலேயே நல்லாட்சி நடத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று மத்திய பாஜக அரசின் பணியாளர் நலத்துறை சமீபத்தில் நற்சான்றிதழ் வழங்கியது. அத்தகைய நற்சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதற்கு 2018-ம் ஆண்டிற்கான குற்ற நிகழ்வுகள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2018-ம் ஆண்டில் நடந்த தற்கொலை நிகழ்வுகளில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடியாக, உடல்நலக் குறைவு காரணமாக 3,034, குடும்பப் பிரச்சினைகள் காரணமாக 6,433 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மொத்த தற்கொலைகளில் 10.3 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுவதாக புள்ளி விவரம் கூறுகிறது.

அதுபோல, குடும்பத் தற்கொலைகளிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு அரசு அதிகாரிகளில் 173 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொள்வதில் 10.8 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 3,162 பேர் தற்கொலை செய்து கொண்ட முதன்மை மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இத்தகைய தற்கொலைகளில் 13 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. காவல் நிலையச் சிறைக் கைதுகளில் 12 பேர் இறந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பொதுச் சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அதிகபட்சமாக தமிழகத்தில் 2,241 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய புள்ளி விவரங்களைப் பார்க்கிறபோது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எத்தகைய சீர்குலைவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு உரிய புள்ளி விவரங்களை மத்திய அரசின் குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நல்லாட்சி நடைபெறுகிறது என்று மத்திய பாஜக அரசு நற்சான்றிதழ் வழங்குவதை விட கேலிக் கூத்தானது வேறு எதுவும் இருக்க முடியாது. சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஜனநாயகத்தின் அடிப்படையில் கருத்துரிமைக்காக போராடுகிற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காட்டு மிராண்டித்தனமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இத்தகைய அராஜகப் போக்கு கொண்ட மத்திய பாஜக அரசு தான் இந்தியாவிலேயே குற்றச் செயல்களுக்கான நிகழ்வில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருக்கிற தமிழகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதைவிட உண்மைக்குப் புறம்பான நகைப்பிற்குரிய செயலை பாஜகவைத் தவிர வேறு எந்த அரசும் செய்ய முடியாது.

மத்திய பாஜக அரசின் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு தெரிவிக்கிற, தலையாட்டி பொம்மையாக அதிமுக அரசு மாறியதால் இத்தகைய நற்சான்றிதழை அடிப்படை ஆதாரமில்லாமல் பாஜக அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் நிறுவனமான தேசிய குற்ற ஆவணக் காப்பகமே இந்த நற்சான்றிதழ் உண்மைக்குப் புறம்பானது என்று அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுக்கத் தவறிய அதிமுக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x