Published : 13 Aug 2015 03:56 PM
Last Updated : 13 Aug 2015 03:56 PM

ராகுல் எழுச்சி: ரசூல் கலாய்ப்பை பெருமிதமாக கருதிய குஷ்பு

கலாய்ப்பை பெருமிதமாக கருதியதன் விளைவாக ஒரு ட்வீட்டை ரீட்வீட் செய்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு. அந்த ட்வீட்டில் கலாய்க்கப்பட்டிருந்தவர், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

ட்வீட் முன் கதை சுருக்கம்:

புனேவில் உள்ள ஃபில்ம் இன்ஸ்டிடியூட்டின் தலைவராக தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அப்பதவி வழங்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஃபில்ம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர்கள் கடிதம் அனுப்பினர்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 30-ம் தேதி, புனே ஃபில்ம் இன்ஸ்டிடியூட் மாணவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்துத்துவா அமைப்பான சங்க் பரிவார் தலையீட்டால் மோடி ஆட்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தரம் குறைந்து வருவதாக ராகுல் பேசியிருந்தார்.

ரசூலின் ட்வீட்

இதை குறிப்பிட்டு கேரள சினிமா துறையைச் சேர்ந்தவரும், ஒலி அமைப்புக்கு ஆஸ்கர் விருது வென்றவருமான ரசூல் பூக்குட்டி, "புனே திரைப்படக் கல்லூரியில் அரை நாள் செலவிட்டதற்கே நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் செயலாற்றல் சட்டென மேம்பட்டிருக்கிறது. அவர் மட்டும் முழு கோர்ஸ் பயின்றால் கற்பனை செய்து பாருங்களேன்" என நகைச்சுவையாக ஒரு ட்வீட் பதிவு செய்திருந்தார்.

இருப்பினும், புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் குரல் கொடுத்ததை பல்வேறு தருணங்களில் ரசூல் பாராட்டவும் தவறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், நகைச்சுவை உணர்வுடன் ராகுல் கலாய்க்கப்பட்டதை உள் அர்த்தம் அறியாமல், பெருமிதமாக கருதிய தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளார்.

இதைச் சுட்டிக்காட்டி, குஷ்புவை கலாய்க்கவும் தவறவில்லை நெட்டிசன்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x