Published : 09 Jan 2020 06:09 PM
Last Updated : 09 Jan 2020 06:09 PM

தமிழக அரசு மின்வாரியத்தில் 1,300 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிப்பது எப்படி?

கணக்கீட்டாளர் பதவிக்கான 1,300 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று (ஜன.8) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கணக்கீட்டாளர் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள அனைவரிடமிருந்து கணினி அடிப்படையிலான தேர்வுக்கு 10.01.2020 முதல் 10.02.2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும், முன்னாள் ராணுவ வீரர்கள், ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் காலிப் பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

கணக்கீட்டாளர்

காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

1,300

ஊதியநிலை

ஊதிய கட்டு - 1 (நிலை-3)

ரூ.19,500 - 62,000

முக்கியத் தேதிகள்

அறிவிக்கை நாள்: 08.01.2020

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள்: 10.01.2020

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.02.2020

தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 13.02.2020

தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்: கணினி அடிப்படையில் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேர்வு நடத்தும் அமைப்பு ஆகிய தகவல்கள் www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தகுதிகள்

வயது

01.07.2019 அன்று எஸ்.சி/எஸ்.டி மற்றும் அனைத்து வகுப்பைச் சார்ந்த கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள் 18 முதல் 35 வயதுடையவராகவும், மிகவும் பிற்படுத்த வகுப்பினர்/சீர்மரபினர் 18 வயது முதல் 32 வயதுடையவராகவும் ஏனையோர் 18 வயது முதல் 30 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி

கலை அல்லது அறிவியல் அல்லது வணிகவியல் ஆகிய பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு/ டிப்ளமோ தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள். அளவீட்டுக் கருவி மூலம் கணக்கீடு செய்வதற்கும் மற்றும் மிதிவண்டி ஓட்டுவதற்கும் தெரிந்திருத்தல் வேண்டும்.

தேர்வுக்கட்டணம்

முற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு ரூ.1,000, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினருக்கு ரூ.500, அனைத்து பிரிவினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள், மற்றும் கணவனை இழந்த ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி மற்றும் இதர வங்கி சேவைக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்களால் செலுத்தப்பட வேண்டும்.

மேலும், விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி, தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையத்தைப் பார்க்கவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x