Published : 09 Jan 2020 12:57 PM
Last Updated : 09 Jan 2020 12:57 PM

ரஜினி நடித்த ‘தர்பார்’: இணையதளங்களில் வெளியிடத் தடை;  இணையதள சேவை நிறுவனங்களுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு

இன்று வெளியாகியுள்ள ரஜினி நடித்த ‘தர்பார்’ படத்தை வெளியிட 1370 இணையதளங்களுக்கு தடைவிதித்த உயர் நீதிமன்றம் 370 இணையதள சேவை நிறுவனங்களுக்கும் புதிய உத்தரவை விதித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படம் ‘தர்பார்’ . ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘தர்பார்’ உலகம் முழுதும் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதுதவிர இன்று முதல் 3 நாட்கள் சிறப்புக்காட்சிகள் ரசிகர்களுக்காக வெளியிடப்படுகிறது. இந்நிலையில் ‘தர்பார்’ படத்தை இணையதளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் வெவ்வேறு பெயரிலான 700 இணையதளங்கள் உட்பட 1370 இணையத்தளங்களில் வெளியிடுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து லைகா நிறுவனம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மேற்கண்ட இணையதளங்கள் மூலமாக சட்டவிரோதமாக படம் வெளியாவதை தடுக்க வேண்டுமெனவும் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட 38 இணையதள சேவை நிறுவனங்களுக்கு இதுகுறித்து உத்தரவிட கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தர்பார்’ திரைப்படத்தை 1370 இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் வெளியிடுவதை தடுக்கும்படி மேற்கண்ட இணையதள சேவை நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x