

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், அவரது சிறைவாசம் 9-வது நாளாகத் தொடர்கிறது.
முன்னதாக, மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கடந்த 29-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.
கடந்த 1-ம் தேதி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஜாமீன் கேட்டு நெல்லை கண்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திருநெல்வேலி 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நெல்லை கண்ணன் தரப்பில் வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு குறித்த விவரம் சேகரிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார்.
இதனால் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு (ஜன.10) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை கண்ணன் சிறைவாசம் 9-வது நாளாகத் தொடர்கிறது.