Published : 08 Jan 2020 10:09 PM
Last Updated : 08 Jan 2020 10:09 PM

முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்கக் கோரி வழக்கு: சமூக நலத்துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் எனவும் சமூக நலத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதால், அனைத்து ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பு மண்டலங்கள் அமைக்க வேண்டும். முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் அமைக்க உத்தரவிடக் கோரியும், கனிமொழி மதி உள்ளிட்ட எட்டு பெண் வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்ந்து ஒராண்டு காலமாகியும் அரசு தரப்பில் பதிலளிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மனுவுக்கு ஜனவரி 13-ம் தேதி பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சமூக நலத்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 13-ம் தேதி தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x