Published : 08 Jan 2020 05:05 PM
Last Updated : 08 Jan 2020 05:05 PM

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தலைகீழாக வாக்களித்துள்ளனர்: முதல்வர் பழனிசாமி பதில்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தலைகீழாக வாக்களித்துள்ளனர் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2020-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.8) ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்த திமுகவினரின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துப் பேசியதாவது:

"மக்களவை தேர்தலில் திமுக ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டோம், மக்களெல்லாம் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று திமுக குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. அது இல்லை. இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக எவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்ற புள்ளிவிவரத்தை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

மக்களவை தேர்தலிலே, அதிகமான வாக்குகளை திமுக கூட்டணி பெற்று, அதிகமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஆனால் அது இப்போது தலைகீழாக மாறி விட்டது.

நாடாளுமன்றத் தேர்தலிலே போட்ட கணக்குப்படி கணக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தீர்கள். ஆனால் உள்ளாட்சித் தேர்தலிலே மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.

ஆகவே, மக்களவை தேர்தலிலே கிராமப்புறங்களிலே எவ்வளவு வாக்குகள் வாங்கியிருக்கிறீர்கள் என்று அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் இப்போது உள்ளாட்சித் தேர்தலில் உங்களுடைய நிலை என்ன? தலைகீழாக மாற்றப்பட்டுவிட்டது.

இன்னும் 9 மாவட்டங்கள் இருக்கிறது. அந்த 9 மாவட்டங்களிலும் அதிக அளவிலே அதிமுகவின் வேட்பாளர்கள் அதிக அளவு வெற்றி பெறுவார்கள், அதுவும் மாறத்தான் போகிறது.

22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலிலே, நாங்கள் அதிக இடங்களை பெற்றுவிடுவோம் என சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஆனால், அதற்குப் பிறகு, இடைத்தேர்தல் வந்தது. இரண்டும் உங்கள் கையிலே தான் இருந்தது. ஒன்று திமுக வசம் இருந்தது விக்கிரவாண்டி, மற்றொன்று, நாங்குநேரி காங்கிரஸ் வசம் இருந்தது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதை நாட்டு மக்கள் எங்களுக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கின்றார்கள்.

அதேபோலத்தான், மக்களவை தேர்தலிலே, கிராமப்புறத்திலே நீங்கள் அதிகமான வாக்குகளை பெற்றீர்கள். அதை வைத்து ஒவ்வொரு வேட்பாளரும் நாங்கள் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்றோம் என்று சொன்னீர்கள். அண்மையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். ஏற்கெனவே நாங்கள் திண்டுக்கல்லிலே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அதைவிட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சொன்னார். என்ன ஆகியது? வேலூர் தொகுதியில் வெறும் 0.70 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றீர்கள். நீங்கள் பெற்ற வெற்றியை நான் மறுக்கவில்லை"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x