புதிய தலைவர்கள் பொறுப்பேற்பு: மதுரையில் புதுப்பொலிவு பெறும் ஊராட்சி அலுவலகங்கள்

புதிய தலைவர்கள் பொறுப்பேற்பு: மதுரையில் புதுப்பொலிவு பெறும் ஊராட்சி அலுவலகங்கள்
Updated on
1 min read

தமிழகத்தில் ஊராட்சிகளில் புதிய தலைவர்கள், உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளதால், கடந்த 3 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத ஊராட்சி அலுவலகங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 91932 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு டிச. 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் ஜன. 2-ல் தொடங்கி மறுநாள் மாலை வரை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக 25 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 91,907 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 24.10.2016-ல் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு புதிய பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனால் ஊராட்சி அலுவலகங்கள் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களின் கீழ் இயங்கின. வீட்டிற்கு வரைபட அனுமதி பெறுவது, தெரு விளக்கு பழுது நீக்குவது, சாக்கடை சுத்தம் செய்வது, தண்ணீர் வராதது என பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை தேடிச் செல்லும் நிலை இருந்தது.

ஊராட்சிகளில் எழுத்தர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். அவர்களும் வீட்டு வரியை வசூலிப்பது உள்ளிட்ட சில பணிகளை மட்டும் மேற்கொண்டனர். ஊராட்சி எழுத்தர்கள் பெரும்பாலான நேரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலேயே இருந்தனர்.
இதனால் ஊராட்சி அலுவலகங்கள் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டன.

இந்நிலையில் புதிய தலைவர்கள், உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இதனால் ஊராட்சி அலுவலகங்கள் புது பொலிவு பெற ஆரம்பித்துள்ளன. ஊராட்சி அலுவலகங்களை வெள்ளை அடித்து சுத்தம் செய்வது, அலுவலகத்தில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த பழைய தலைவர்களின் பெயர்களை அழித்து புதிய தலைவர்களின் பெயர்களை எழுதுவது, வாயில்களை சுத்தம் செய்து அழகுபடுத்தவது, அலுவலகத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவது எனப் பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஊராட்சித் தலைவர்கள் பலர் ஊராட்சி அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்படுத்தவும், தங்கள் விருப்பப்படி அலுவலகங்களை அழகுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in